மரபு தூறலின் முகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரபு தூறலின் முகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிஞர் சரவணன் இராமசந்திரன்


 

நல்மழையே நில்!
 
வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ?
உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே!
கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணுற்றுக் கலங்கிட்டோம்!
படும்பாட்டை வெல்வதற்கோ பலவழிகள் வேண்டிநின்றோம்!
கண்ணுறக்கம் போக்கிவிட்டாய்க் காண்திசையில் நீர்பரப்பி!
விண்ணவளே நீபுரியும் வேடிக்கை விட்டிடுவாய்!
இயற்கைமகள் நீநடத்தும் இவ்வேலை எதுவரைக்கும்?
செயற்கைமிகு சிந்தனையின் செயல்பாட்டின் விளைவிதுவோ?
எப்பிழைதான் மனிதர்கள் இயற்கைக்குச் செய்தாலும்
அப்பிழையைப் பொறுப்பதன்றோ அன்னையவள் அடையாளம்!
செல்வழியும் தெரியாமல் சேய்கள்தாம் தவிக்கின்றோம்!
நல்வழியும் நீகாட்டி நன்மைமிகச் செய்திடுவாய்!
இனியுமென்ன சோதனைகள் எங்களுக்குத் தரவுள்ளாய்?
இனிமைமிகு நல்வாழ்வை ஏன்பறித்துக் கொள்கின்றாய்?
மரம்வளர்க்கத் தவறிட்டோம் மலைமகளே மன்னிப்பாய்!
தரமுயர்த்த இயற்கையினைத் தாழ்த்திடவே இனிமாட்டோம்!
குலங்காத்த குலமகளே குடியமர வகைச்செய்வாய்!
நலங்காக்கும் நல்மழையே நகர்!

**********************************************************************************************
எது கவிதை ?
 
புதுக்கவிதை எழுதிவரும் புதுமையுளம் படைத்தோரே;
எதுகவிதை என்றறிய இலக்கணமுங் கற்றீரோ?
முதுக்கவிதை படைத்திட்ட முன்னோர்தாள் பற்றீரோ?
மதுக்கவிதை எழுதிவரும் மரபுவழி மறந்தீரோ?
 
புதுமைகளை ஏற்பதிலே பொதுவுணர்வு மிங்கிருக்கு!
புதுக்கவிதை பழைமையிலே பூத்துவந்த புதுவழக்கு!
பதுமையல்ல பழைமையதும் பதுங்கிடவே அறிந்திடுக!
புதுநெறிதான் உயர்ந்ததென்ற போக்கதனை மாற்றிடுக!
 
விதிவகுத்த நம்முன்னோர் வீணரல்லர் விளங்கிடுக!
சதிவலையைப் பின்னிவைக்கும் சதிராட்டம் நிறுத்திடுக!
புதுக்கவிதை எனும்வழக்கைப்  புறந்தள்ளி வைத்திடுக!
மதிப்பளித்துப் பழைமைவழி மகிழ்ந்துடனே நடந்திடுக!
 
மரபதனைக் காப்பதொன்றே மதிப்பளிக்கும் நல்முறையாம்!
கரமதனைக் கோத்துநின்றால் கறையாவும் நீங்கிடுமாம்!
உரமதனை இட்டுவைத்தால் உளமதுவும் தெளிவுறுமாம்!
தரம்நிறைந்த முதுக்கவிதை தரணியிலே நிலைத்திடுமாம்!
 
உரைவீச்சைக் கவிதையென உரைப்பதையே தவிர்த்திடுக!
கரையோரம் நின்றுகொண்டு கடலாழம் எண்ணாதீர்!
கரைதாண்டி கடல்வந்தால் கவிமுத்தும் எடுத்திடலாம்!
உரைவீச்சைக் கடந்துவந்தால் உயர்கவிதை படைத்திடலாம்!


 

முனைவர் குமரன் வேலு இராமசாமி


 

மாண்புமிகு மனைவி
 
காலைக்குள்  பூசைசெய்து கையை வைத்து
     கண்ணாளன் எனையெழுப்பி கண்ண டித்து
வேலைக்கு மணியாச்சு விரைக என்பாள்
      விழுந்தடித்து தொடங்கிடுவாள் வீட்டு வேலை
சாலைக்கே வந்திடுவாள் 'தாட்டா' காட்ட
      சாயங்கள் பூசாத அன்பால் மின்னும்
சோலைப்பூ  என்மனைவி சொக்கத் தங்கம்
     சொல்லாலே எனைவெல்லும் சொந்தக் காரி!
 
அஞ்சிநிற்கும் ஆண்மகனால் ஆவ துண்டோ
            அச்சமின்றி முயன்றிடுக அன்பே என்பாள்
கொஞ்சிநிற்கும் வேளையிலும் குலைந்தி டாமல்
     குடும்பத்தின் நலனொன்றைக் கோரி நிற்பாள்
வஞ்சிநிற்கும் வடிவழகில் வடிவு ரைத்த
      வள்ளுவனின் இலக்கணங்கள் வழுவா நிற்கும்
எஞ்சிநிற்கும் நாள்களிலே இவளுக் காக
      எனதன்பை கொட்டுதலே இன்ப மாகும்!
 
தன்னலங்கள் இல்லாத தாயைப் போன்று
          தற்பெருமை கொள்ளாத தகைமை ஒன்றால்
அன்னலட்சு மியாம்தெய்வம் அவளின் கையால்
          அன்பொழுக உணவருந்த ஆவல் கூடும்
இன்னலில்லை இதுவரைக்கும் இன்னும் உண்ண
          எண்ணுகிற தென்நெஞ்சம் இவளுக் காக
 என்னலங்கள் விட்டுவிட ஏங்கு கின்றேன்
       எனதருமை மனையாளின் இன்பத் திற்கே!
   
நிலவைப்போல் அவள்பார்க்கும் பார்வை யாலே 
       நெஞ்சுருக்கும் துயரங்கள் நீற்றுப் போகும் 
கலவைப்போல் மனதுள்ளே கலக்கம் வந்தால்
     கணக்காக வழிசொல்வாள் கவலை நீங்கும்
குலவைத்தான் இடுகின்றார் கோயில் கட்டி
      குலதெய்வம் கும்பிடத்தான் வீட்டில் வாழும்
சிலைவைத்தால் மனதுக்குள் சிலையை வைத்தே
    சித்திரமாம் மனைவிக்குச் சிறப்பு செய்வேன் !

**********************************************************************************************

தாய்மொழிக் காத்திடு
 
நிறைமொழித் தமிழ்தன் னேரில்லாத
மறைமொழி இதிலே மந்திரம் உண்டென
வாய்மொழி யாலும் மனமொழி யாலும்
தாய்மொழிக் காத்தல் தமிழரின் கடனாம்
செந்தமிழ் அறிந்தார் செம்மைப் பெற்ற
அந்தணர் ஆகி அருந்தமிழ் யாத்ததால்
கற்றுணை பூட்டிக் கடலிற் பாய்ச்சியும்
சொற்றுணை தந்தது தூயத் தமிழாம்
தூயவள் தமிழைத் தொழுதல் நன்றாம்
தாயவள் மகிழ்வாள் தமிழரும் தழைப்பார்
பற்றுகள் கொண்டு பயின்றிடத் தமிழால்
வெற்றிகள் தேடி விரைவில் வந்திடும்
விண்ணவர் அறியும் வியன்மிகு தமிழை
மண்ணிதில் தமிழர் மறுதலிப் பாரெனில்
வையமும் இகழும் வானோர் நகைப்பர்
ஐயமே இல்லை! அவனியில் நம்நிலை
ஒற்றுமை யற்றே வீணாய்ப் போகுமுன்
பற்றுவோம் தமிழைப் பார்வை விரியுமே!   
ஓங்கலி டையுதித்(து) ஒளிரும் கதிர்போல்
ஓங்குக தமிழ்ப்புகழ் உலகில் எங்குமே!


 

கவிஞர் சு. குணசேகரன், மலாக்கா


 

புத்தாண்டு வேள்வி
 
பா: நாலடிக் கொச்சகம்
புதிய ஆண்டே இனிதே வருக
     புதுத் தெம்பை யள்ளித் தருக
புதிய திட்டம் வெற்றிப் பெறுவே
     புதுத் திடமும் விரைந்து தருக!
 
சவால் கொண்ட ஆண்டு கடந்து
    சாதனை பெறும் ஆண்டு மலர்க
சீறும் நோய் சிதறிப் போக
   சீரும் சிறப்பும் செழித்து வருக!
 
மனித குலமும் உறுதி யுறுக
  மண்ணுலகும் மாண்பு பெறுக
புனித செயல் யாவும் பெருக
  புண்ணி யங்கள் நிலைத் துயர்க!
 
கல்வி சமூகம் பொருளும் உயர்க
   கன்னல் தமிழும் நிலைத்து நிற்க
களிப்பு நிறையும் ஆண்டு மலர
   கன்னி முயற்சி யாவும் செய்க!!!
 
******************************************************************************************

அன்பு வாழ்ந்திடுமே !
 
அன்பென்று சொல்வதால்
வன்புதான் பிறந்திடுமோ!
அன்புக்கும் உண்டோதான்
அடைக்குந்தாழ் அறிவோமே!
அன்றேநல் மொழிந்தாரே!
அறப்பாலில் வள்ளுவரும்!
நன்குசெய் நலிவிலாது
நல்லன்பும் வாழ்த்திடுமே!

கவிஞர் உசாராணி சாமிநாதன்


 

மூச்சிலும் பேச்சிலும் முதுமொழி தமிழே
 
வையம் பேசும் மொழிகளிலே
    வளமை நிறைந்த வண்டமிழே
பைய நாவை அசைத்தாலும்
   பாங்காய் வருவாய்ப் பைந்தமிழே!
மையல் கொண்டு கற்றாலே
  மங்காப் புகழைத் தந்திடுவாய்
தையல் உன்னைப் போன்றதொரு
  தனித்த மொழியும் இல்லையம்மா
 
சங்கம் வைத்து வளர்த்தனரே
  சாரம் மிகுந்த செம்மொழியை
வங்கக் கடலின் ஆழம்போல்
  வளமை பலவும் நிறைந்துள்ள
தங்கத் தமிழைக் கற்றதனால்
  தனித்த புகழைப் பெற்றவர்கள்
எங்கும் மக்கள் பலருண்டாம்
   என்றே நீயும் அறிவாயா?
 
மண்ணில் பிறந்த மானிடனே
   மங்காப் புகழைப் பெற்றிடவே
விண்ணில் சென்று நீயுந்தான்
  வெற்றிக் கொடியை நாட்டிடவே
கண்ணின் மணியாய் நம்தமிழைக்
  கருதி நீயும் கற்றிடணும்
எண்ணம் யாவும் எப்போதும்
    என்றன் உயிரே என்றிடணும்

********************************************************************************

தாயே நீதெய்வம்

குடிபுகுந்தாய் என்னில்லம் குன்றாது நிற்க
விடிவெனக்கு நீதந்தாய் விந்தைதான் நாளும்
முடிந்தவரைக் காத்திடவும் முற்றிலுமாய்த் தந்துப்
படியெனவும் வந்திட்டாய்ப் பார்!
 
பார்மிசை வாழ்த்துகின்றேன் பார்த்தெனைப் புன்னகையால்
வார்த்தைகள் சொல்லுகின்றாய் வர்ணிக்க வார்த்தையில்லை
சேர்த்தெனை முத்தமிட்டாய் சேர்த்துவைத்த சொத்தாக
சீர்பெற வேண்டும்நீர் சீர்!
 
சீர்பெற்று நானும் சிறந்திட என்னருகில்
பார்போற்ற என்னையும் பார்த்தவர்கள் கண்படவும்
ஊர்விட்டு வந்தெனை ஊரறியச் செய்திட்டாய்
யார்செய்தல் கூடிடுமோ பார்!
 
யார்வந்து நின்றிடினும் யார்வந்து சொல்லிடினும்
கார்மேகம் போன்றென்னைக் காலத்தில் மாற்றிட்டாய்
மார்தட்டிச் சொல்லிடுவேன் மாதாவே நீதெய்வம்
சீர்பெற்று நின்றிடும் சீர்!
 
சீலத்தில் நல்லது சீர்த்தமிகு தாயன்பு
ஞாலத்தில் நன்னெறிகள் ஞானத்தா லோங்கிடவும்
காலத்தில் செய்திடுவாய் காரியங்கள் ; நன்மைகளால்
பாலத்தை நல்கும் பறந்து!
 
மாண்புள்ள சான்றோர்கள் மண்ணுலகில் தாயன்பைக்
காண்கின்ற பாதையைக் கண்ணெதிரே காட்டிவிட்டார்
வேண்டுகின்ற சொத்துகள் வேகமாய்ப் பற்றிடவே
ஆண்டவனும் நல்கிய அன்பு!

கவிஞர் மகிழன் கணேசன்


 

உயிர்மொழியான தமிழ்மொழியாம்!
 
உலகத்தில் மூத்தமொழி!
      உயிர்தனிலே கலந்தமொழி!
உலவுகின்ற யாவிலுமே
      ஒன்றாக இயைந்தமொழி!
கலைகளின் பிறப்பிடமாய்க்
      காப்பியனைத் தந்தமொழி!
கலகமென்ப தில்லாத
      கண்ணியத்தில் நிலைத்தமொழி!
 
தமிழகத்தில் பிறந்தமொழி!
      தனிச்சிறப்புக் கொண்டமொழி!
அமுதென்று பாவேந்தர்
      அழகாகச் சொன்னமொழி!
இமிழ்கடலைத் தாண்டியுமே
      இமயம்போல் உயர்ந்தமொழி!
இமையளவும் வளம்குன்றா
      இனிக்கின்ற என்ற(ன்)மொழி!
 
ஐந்துபெருங் காப்பியமாய்
      அணியொளிரும் இலக்கியமாய்
ஐந்தெழுத்து வாசகமாய்
      ஆளுகின்ற பழைமைமொழி!
ஏந்திநின்ற இலக்கணத்தால்
      எந்நிலையும் செழித்தமொழி!
வேந்த(ர்)குலம் காத்தமொழி!
      வீறுகொண்ட தாயி(ன்)மொழி!
 
வள்ளுவனின் பாக்களிலே
      வாழ்கின்ற வாழ்வி(ன்)மொழி!
தெள்ளமுதம் அளிக்கின்ற
      தேன்சொட்டும் இனியமொழி!
உள்ளமதைக் கொள்ளைகொள்ளும் 
      உணர்வுமிக்க அமுதுமொழி!
துள்ளவைத்துக் கிழவனையும்
      துல்லவைக்கும் கனிந்தமொழி!
 
காத்துவரும் மரபினிலும்
      காணுகின்ற காட்சியிலும்
யாத்துவைத்த பாவினிலும்
      இலக்கியத்தின் வகைகளிலும்
மூத்தமொழி இம்மொழியாம்!
      முடிவில்லா நிறைமொழியாம்!
ஏத்துதலுக் குரித்தாகும்
      எம்மொழியே தமிழ்மொழியாம்!
************************************************************************************

தேன்மொழியாள்
 
வண்ணப் பூவொடு வரிவண்டின் காதல்போல்
விண்ணின் மதியின் முகத்தாளை நோக்கின்
பண்ணும் இழைந்து பாவன்பு கொள்ளுதே!
 
சொட்டுங் காதற்குச் சூடும்பூ வாரமாய்த்
திட்டுந் தேன்மொழியாள் பேச்சுங் கேட்கின்
கொட்டுங் கொடுந்தமிழும் நெஞ்சத்தை அள்ளுதே!
 
மதுவூறும் மலர்போல் மயிலின் நடம்போல்
பதமாய் இவள்நடை பாரினில் பார்க்கின்
இதமாய்(எ)ன் னுள்ளம் இசையாய்த் துள்ளுதே!


கவிஞர் சி.விஜயலட்சுமி கோவிந்



 

இரண்டாம் தடுப்பூசி
 
தரணி தனையே முடமாக்கித்
    தாண்ட வமாடும் கோறனியை
விரைவாய் ஒழித்துக் கட்டிடவே
    விரைந்து கண்டார் தடுப்பூசி!
வரமாய்க் கிடைத்த அம்மருந்தை
    வயதில் மூத்த பெரியோர்க்கே
அரணாய் அமைக்க அரசாங்கம்
    ஆய்ந்து தெளிந்து போட்டதுவே!
 
புதிய சட்டம் ஒன்றனைத்தான்
    பொதுவில் கொண்டு வந்தரசு
மதித்தே ஊசி இரண்டுமுறை
    மறவா மல்நீ போட்டால்தான்
விதியை மாற்ற வழிபிறக்கும்
    விரைந்து உலகம் நலம்நாடும்!
அதனால் இளையோர் அனைவருமே
    அதனைப் பெறவே விரைந்திடுவீர்!
 
வயதில் மூத்த பெரியோர்தம்
    மக்கள் நிழலில் வாழுவதால்
சுயமாய் எங்கும் செல்வதற்கும்
    துணிவே யின்றிக் கலங்குகின்றார்!
துயரில் வாழும் முதியோரின்
    துன்பந் தனைத்தான் அரசறிந்தே
புயலாய்த் தடுப்பு மருந்தினையே
    போட்டு முடித்தல் சிறப்பன்றோ!

*********************************************************************************

குறை தீர்ப்பாய் குமரா
 
கந்தா கடம்பா கதிர்வேலா
    காப்பாய் உலகைத் திருக்குமரா!
வெந்தே மண்ணில் வாடுகின்றோம்
    விடிவைத் தரவே விரைந்தேவா!
சொந்தந் தனையே தூரவைத்தோம்
    தொட்டுப் பேச அஞ்சிநின்றோம்!
பந்தி யனைத்தும் ஒதுக்கிவைத்தும்
    பரவும் தொற்றோ குறையவில்லை!
 
வீடு தோறும் வேதனைகள்
    விஞ்சி நின்றே ஆடிடுதே!
காடும் கொள்ளா பிணக்குவியல்
    கண்டே மனமும் கலங்கிடுதே!
நாடும் வீடும் நலம்காண
    நாடி யுன்னை வேண்டிநின்றோம்!
கேடு யாவும் போயகல
    கிருபா கரனே அருள்புரிவாய்!

கவிஞர் ரேவதி ஜீவநாதன்


 

தைப்பூசம்
 
தைத்திங்கள் பிறந்ததுவே  தரணியில் வளமாக
தைப்பொங்கல் பொங்கியதே  தமிழர்கள் இல்லமதில்
தைப்பூசம் மலர்ந்ததுவே  தரணிவாழ் முருகனுக்கு
தைதைகா வடியாடாது  தளர்ந்தனரே பக்தர்கள்!
 
கைக்கூப்பி வணங்குதற்கு  காத்திருக்கும் பக்தர்கள்
வைக்கும்கா ணிக்கைகள்  வடிவேலைச் சேரவில்லை
கைக்குழந்தை தொட்டிலிலே  கரும்புகளும் காணிக்கை
வைக்கும்நாள் கூடவில்லை   வந்துவிட்ட நச்சுயிரால்!

****************************************************************************************

அன்பையள்ளும் திருநாள்
 
அன்பெனும் நதியினிலே  ஆர்வமுடன் விளையாடி
அன்புடனே நேசத்தால்  அகிலங்கள் கொண்டாடும்!
அன்பையள்ளும் திருநாளை  அனைத்தின்று மக்களுமே
அன்புநெறி போற்றிடவே  அகமகிழ்ந்து களித்திடுவர்!
 
மலர்களினால் பரிமாற்றம்  மனத்தையும் மயக்கிடுமே
உலர்ந்திட்ட உள்ளமதில்  உற்சாகப் பண்பாடும்!
நிலமங்கை பூரிப்பாள்   நின்மலனை வழிபட்டே
வலக்கரமும் பற்றிதினம்  வாழ்வுநலம் பேணிடுவாள்! 
 
காதலர்கள் தினமென்று  காலமெலாம் செப்புகின்றர்
வாதிட்டு சென்றிடினும்  வழக்கமதை மாற்றவில்லை!
சாதகமாய் பயன்பாட்டில்  சாதனையாய் ஆண்டுதொறும்
காதலர்நாள் சிறந்திடுதே கண்டுமனம் சொக்கிடுதே!

கவிஞர் இராசமோகன் நாதன்

 


வாழ்க அம்மா

யாப்பதனைக் கற்பதற்குத் தூண்டு கோலாய் ,
      இங்கிருவர் வந்துதித்தார் தெய்வம் போல !
பாப்புனையும் பரம்பரையைப் பெருக்க நாளும்
       பணிச்சுமையைக் கனிச்சுமையாய் தோளில் ஏற்றி,
பூப்போலப் புல்லரும்புப் பனியைப் போல,
        போதிப்பார், சாதிப்பார், சிகரம் செல்வார் !
காப்பதற்கும் கவிதைவெள்ளம் பாய்வ தற்கும் ,
       காலமெல்லாம் துணையிருப்பார் முனைவர் இங்கே !
 
நாட்டினிலே தோய்ந்திருக்கும் மரபு வேரை,
       நலிந்திருக்கும் நிலைமாறி செழிப்ப தற்கே ,
வீட்டினிலே கற்றிடவே வாய்ப்ப ளித்தார்,
      விளங்கிடவும் எளிதான வழிகள் செய்தார் !
ஏட்டினிலே அச்சேற்றி மகிழ வைத்தார் !
      இளையோரைப் பண்படுத்தி உயர வைத்தார் !
போட்டியிலும் பங்கெடுத்தே வெல்ல வைத்தார்!
      போர்க்களத்தில் வீரனைப்போல் பாயச் செய்தார் !
 
கற்றவர்கள் எத்தனையோ நமக்குள் இருக்க,
      கருதாதப் போக்கினையே கண்டு வந்தோம் !
பெற்றவர்கள் பேணுகின்ற பிள்ளைப் போல,
      பெருந்தவத்தால் எங்களுக்கே தாயாய் வந்தீர் !
நற்றமிழின் வித்தையெல்லாம் கற்கச் செய்து ,
      நற்பணியாய் நாளெல்லாம் செய்யும் நன்மை !
உற்றதொரு இறைக்கவிஞர் சீனி அய்யா
    உயிர்ப்பெற்று வந்ததுபோல் வாழ்க அம்மா !

********************************************************************************************

மலேசியமே

தேசியத்தின் முழக்கமின்று
திசையெங்கும் ஒலிக்கட்டும்
ஆசியத்தின் முகமென்றே
அகிலத்தில் விளங்கட்டும்
 
வந்தேறி , குடியேறி
வசைபாடிக் களிப்போரும்
சிந்தித்திங்(கு) அடங்கட்டும்
சிந்தனையில் மாறட்டும்
 
இனமென்றும் மதமென்றும்
இழிநாவால் சுடுகின்ற
மனமெல்லாம் மாயட்டும் ;
மனிதத்தைப் போற்றட்டும்
 
ஓரினம்தான் ஆளுமென்ற
ஓலங்கள் அடங்கட்டும் !
பாரினங்கள் வாழுகின்ற
பாதையெங்கும் விரியட்டும்
 
பேசுவதைச் செய்யட்டும்
பிரிவினைகள் ஒழியட்டும்
காசுபணம் குறிகொண்ட
கள்வர்களும் சாகட்டும் !
 
தடுமாறும் தர்மங்கள்
தடம்மாறிப் போகாது !
நடுநிலையாம் மனுநீதி
நடக்கட்டும் இங்கெவர்க்கும் !
 
உழைத்தவர்கள் நம்மவர்கள்
உரிமையினைப் பெற்றிடுவோம் !
தழைத்துநின்று தொழில்வளத்தில்
தன்மானம் காத்திடுவோம் !
 
மலேசியமே ஒருமையென்ற
மாண்புமிகு நிலையிங்கு
வலம்வந்தே நிலைக்கட்டும் !
வளமெல்லாம் பெருகட்டும் !

கவிஞர் முனைவர் மோகன்குமார்


 

கயமை வாழ்வு
 
பொய்மையும் புரட்டும் செய்வான் போலியர் உலகில் வாழ்வான்!
மெய்மையைப் பழித்தும் மெல்வான் மெனக்கெடக் குடியைக் கொல்வான்
மய்யலில் மோகம் கொள்வான் மயங்கிட பழிகள் சூழ்வான்!
மெய்தனில் வினைகள் ஏற்பான் மெலிந்திட இயற்கை ஆவான்!
 
மொழிதனில் கட்சி சேர்ப்பான் மடிதனை மனத்தில் வைப்பான்!
இழிதகை இருண்மை யாள்வான் இனிப்பாய்ப் பேசி வெல்வான்!
கழிவுகள் கறையாய் வாய்ப்பான் கசடுகள் கணத்தில் கோர்ப்பான்!
சுழிவுகள் கொண்ட வாழ்வில் சூனியம் கொண்டு மாய்வான்!
 
பழிகளை மனத்தில் வைத்துப் பதடியாய்ப் பழகி வாழ்வான்!
பிழைகளைச் செய்து நாளும் பிறப்பினைத் தாழ்த்தி வீழ்வான்!
கழிச்சடை கயமை வாழ்க்கை காரிருள் பொதிந்து சூழும்!
விழியதும் விழிப்புக் கொள்ளா வீம்பு டன் விண்ணி லேகும்!

************************************************************************************************

உழவர் வாழவேண்டும்
 
உழவர்தம் திருநாளே உலகோர்க்குப் பெருநாளே !
    உழைவர்தன் உன்னதத்தை உலகத்தார் வியந்தாரே !
பழந்தமிழர் மாண்பதனை மன்பதையில் காண்பதனால்
    பல்லூழி பழக்கம்தான் பயின்றநல் வழக்கம்தான் !
பிழைத்திடும் பூமியிலே புவியோர்கள் ஏற்றிடுதல்
    பிழையின்றிப் போற்றிடுதல் பண்பாட்டு ஒழுகல்தான் !
இழையோடும் பழக்கம்தான் இறைமையின் அழகும்தான்
    இல்லத்தார் மகிழ்ந்திடவும் இன்னொளியும் கூடுங்கால் !
 
உலகமாந்தர் உயிர்வாழ ஊனினையும் உழைப்பாக்கி
    உயிர்ப்பித்து நிலத்திடையே உய்யவழி கண்டிடுவார்
விலகிடுமே இன்னல்களும் வறுமைகளும் வாழ்வதனில்
    விவசாயம்நல் வாழ்வாகி வளமாக்கும் வண்ணமுமாய்!
குலமாண்பு குறையாமல் குத்துண்டும் மிதிபட்டும்
    குவலயத்தில் பரிதவித்துப் பலகாலம் இடருற்றும்
உலன்றநின் வாழ்வதனும் பூமியிலே புதைந்தாலும்
    புத்தாக்கம் கொண்டிங்கு புதுவாழ்வும் பெறவேண்டும்!
 
ஏறுழவன் பூமிதனிலே ஏற்றமுடன் வாழ்வதனை
    ஏழ்மையையும் போக்கிடவே எழில்கொண்டு வாழ்ந்திடவும்
அறுவடையும் பெருகிடவும் அறவாழ்வும் மிளிர்ந்திடவும்
    ஆகாயம் உயர்ந்திடவே ஆண்டவனின் அருள்வேண்டும்
மறுவாழ்வு பெற்றிங்கு மாணாக்கம் கொண்டிடவே!
    மலர்ந்திடவும் மணந்திடவும் மகிழ்ந்திடவும் இகவாழ்வும்
சிறுமதியும் போக்கிடவே சிறந்தெழுவார் உழவரினியே!
    சிறுவாழ்வும் சீர்பெறவே சிங்கம்போல் முழங்கிடுமே!
 
தொல்லுலகில் தோன்றியநல் தொன்தொழிலாம்  விவசாயம்
    திருமையையும் அருமையையும் திருநாளில் தந்திடுமாம்
சில்லறைகள் பெருகிடவும் சிறுமைகளும் அகன்றிடவும்
    சிறந்தோங்கி பயிர்த்தொழிலும் சுகத்தினிலே நிலைத்திடவும்
கல்லறைகள் கனக்கின்ற கருமைகளும் விலகிடுவே!
    கழனியிலே உழவுப்பணி காலமெல்லாம் பெருகவேண்டும்
புல்லுணர்வார் புவிதனிலே புறமேகி ஓடிடவே!
    பல்லாண்டுப் பசுந்தொழிலும் பாரெல்லாம் குலுங்கவேண்டும்!

கவிஞர் ஜோசப் செபாஸ்தியன்


 

ஒளி பிறந்ததம்மா
 
ஒளி பிறந்ததம்மா உலகில் வழியுதயமம்மா
ஓர் குலவாழ்வில் அமைதி குடி கொண்டதம்மா
கேளி கூர்த்திடும் கனிவாய் நுனிசிறந்திட
கனி தரு மரமாய் குலுங்கி சிறப்போமம்மா
 
மனுக்குல மீட்புக்கு மாண்புயர் தேவனாய்
மண்ணிலே பிறந்தார் மங்கா மாட்சியுடனே
தனக்கென வாழாது பிறர்க்கென பணியாற்ற
தவப்புதல்வர் வாருமையா தாங்கொனா ஆட்சியுடனே
 
எளியோரின் இல்லமெல்லாம்  எக்காளம் முழங்கிடவே
ஏசுபிரான் உம்மரசு எந்நேரம் பறைசாற்ற
களிப்பூட்டும் காரிருளில் கர்த்தரவர் அவதரிப்பு
கானக்தோர் உள்ளமெல்லாம் கவிபாடி புகழ்ந்திடவே
 
மரியாளின் இறையன்பு மானிலத்தில் மின்னிடவே
மனங்கவர் மணவாளன் மறைநூலை தந்துள்ளார்
திரியேக தேவனிவர் திகட்டாத இறையுமவர்
திருவிருந்தில் தருவாரே தித்திப்பாய் மறையுண்மை
 
திசம்பரிலே பூத்தவொரு தேமதுரத் தேவனிவர்
தீதில்லா மறையோனே தினமுந்தன் திருநாமம்
நேசத்தின் எல்லையிலே நேர்த்தமிகு மனதுடனே
நாயகா நம்பிக்கை நற்கருணை குணநாதா
 
அடியோரின் உள்ளத்திலே ஆழ்கடலின் முத்தெனவே
அசைந்தாடும் தென்றலென ஆடிவரும் அன்பிறைவா
தேடி வரும் பக்தரிடம் தேன்சுவையின் சுவையறிய
தேவாதிதேவா ராஜாதிராஜா எங்களுடன் வாழும்

********************************************************************************************

கல்வெட்டில் பதியட்டும்
 
ஒற்றுமையில் பற்றுவைக்கும் உணர்வு வேண்டும்
    உடன் பிறப்பாய்ப் பிறவினத்தை மதிக்க வேண்டும்
கற்றவனாய்த் திகழ்வதற்குப் படிப்பு வேண்டும்
    அறிந்திருக்கும் துடிப்பு வேண்டும்
வெற்றுரையைச் சொல்லாத விவேகம் வேண்டும்
       வீண்வாதம் பாவமெனும் விவஸ்தை வேண்டும்
மற்றவரை இழிவாகக் கருதல் விட்டு
    மனிதகுலம்  சிறந்தோங்க உழைக்க வேண்டும்!
 
சொந்தமொழி தமிழமுதைப் கற்ப தற்குச்
    சுயமாகத் தன்னுணர்வு எழும்ப வேண்டும்
பந்தமுள்ள தொடர்புமொழி ஆங்கி லத்தைப்
    பகுத்துணர்ந்து கற்றிடவும் ஆற்றல் வேண்டும்
சிந்தைதனில் மலாய்மொழிக்குச் சீர்மை தந்து
    சீனமொழி கற்றாலும்  வெற்றி மேலும்
விந்தைமிகு மலேசியத்தின் வலிமை ஓங்க
    வினயமுடன் பலமொழிகள் தெரிய வேண்டும்!
 
தமிழுக்கு மகுடத்தைப் சூ ட்டப் போகும்
    தமிழ்க்கவிப் பெருவிழாச் சிறக்க வேண்டும்
அமிழ்தான மொழிக்கு அச்சாரம் பதிப்பதற்கு
    ஆராய்ந்து முத்திரை பதித்தல் வேண்டும்
நிமிர்ந்து நிற்கும் நம்மினத்தின் புகழைச்சொல்ல
    நாளைய தலைமுறைக் கிதுவழியைக் காட்டும்
தமிழனத்தின் வரலாற்றை தக்கதொரு தருணத்தில்
 
பாவலரின் மன்றங்கள் பலயிங்கு இருந்தாலும்
    பாங்குடன் தமிழ்ச்சேவை செய்யுவதை மறுப்பதில்லை
நாவலர்கள் பலபேரை நயமுடனே உருவாக்க
    நற்கவிப் பெருவிழா சிறக்க வேண்டும்
பாவலர்கள் ஏற்றவிழா பிரபலமாய் அடையட்டும்
    பங்குபெறும் எல்லாரும் பொறுப்புதனை யுணரட்டும்
காவலர்கள் தமிழ்ச்சேவை காவியமாய்த் தொடரட்டும் 
    காலத்தால் அழியாத கல்வெட்டில் பதியட்டும் 

கவிஞர் விண்ணமுதன் ஆத்மலிங்கம்


 

மக்கள் விரும்பும் விண்ணமுது!
 
கார்மேகஞ் சூழ்வானில் காரிகையாய் மீண்டுமிங்கே
ஊர்மக்கள் பஞ்சத்தை ஓட்டிடவே மாமழையாய்
சீர்மிகு நல்லமுதாய்த் தீயோர்க்கும் நல்குகின்ற
கார்மழையே நீவாழி பெய்து!
 
வீழும் பயிர்க்கு விருந்தாய் அமைந்திங்கு
மாழும் உடற்கு மருந்தாய் அமைந்துபின்
சூழுகின்ற வெப்பினது சூட்டினைப் போக்கியே
வாழுமிந்த வான்மழை நன்கு!
 
விண்ணமுதாய் மக்கள் விரும்பும் இறைப்படைப்பாய்க்
கண்ணெதிரே தோன்றிக் கருத்தாகப் பெய்துவரும்
விண்ணழகைப் பாடுமொரு விந்தையினைக் கொண்டதனால்
பண்ணமுதம் தந்தேன் உனக்கு!

*******************************************************************************************

பாரதத்தீப் பாவலன்
 
தீந்தமிழ்ச் சொல்லெடுத்துத் தேனாகப் பாட்டிசைக்கும்
வேந்தே; தமிழ்த்தாய் விரும்பிய மைந்தேநீ
மாந்தன் புகழ்நோக்கி வந்தாய்; கவிதந்தாய்!
காந்தமாய் ஈர்த்தொளிர்ந் தாய்!
 
பாவையர் போற்றிடும் பாரதக் காதலனாய்;
தூவலைக் கொண்டு துயர்தனைப் போக்கிடும்
சேவையைச் செய்துவந்த தேன்தமிழ்ச் சேயானாய்
யாவும் அறிந்துமறைந் தாய்!
 
பாரதி என்றிடும் பாரதத்தீப் பாவலனை
வீரத்தின் ஊற்றாய் வியந்தென்றும் போற்றியே;
தீரமிகு அக்கவியைத் தேடிப் படித்ததன்
சாரைப் பருகிவாழ் வோம்! 

கவிஞர் ஆதித்தன் மகாமுனி


 

மனிதநேயம்
 
விஞ்சுபுகழ் வானேறி எல்லை தொட்டோம்
       விசும்புகிற ஏழைக்கு வீதி திட்டம்
தஞ்சமென்றால் கைகொடுக்க யார்தான் உண்டோ
        தரணியிலே அன்புக்கு விடையோ பஞ்சம்
நெஞ்சமில்லார் தன்பையையே நிறைத்து வாழ
       நெறிநின்றோர் வீடுபுகழ் பெற்ற பின்னும்
கொஞ்சுமொழி எங்கிருந்தோ கேட்டு விட்டால்
       குவலயத்தில் இருக்குமொரு மனித நேயம்!
 
ஊற்றுகிற பாலெல்லாம் வீணாய் போக
     ஊர்வீதி தெருக்களிலே பிள்ளை வாடும்
சாற்றுகிற காணிக்கை தீயில் வேக
     சாமிவந்தா வட்டியிலே சோறு போடும்
போற்றுகிற குலதெய்வம் முன்னே நின்றால்
     போற்றிடவா மாந்தரினம் நாடி யோடும்
ஏற்றிடவோ வடலூரின் ஞானி வந்தார்
      இன்றளவும் வாழ்கிறது மனித நேயம்!
 
புள்ளுக்கும் பூண்டுக்கும் தண்ணீர் விட்டுப்
       பூனைக்கும் யானைக்கும் நேயம் வைக்க
பிள்ளைக்கும் பேடிக்கும் வீரம் சொல்லி
       பெற்றவரும் கற்றவரும் மனிதம் காக்க
முள்ளுக்கும் பூவுக்கும் இடையே எங்கோ
        முளைத்திருக்கும் சொல்லாத காதல் போல
எல்லோர்க்கும் அடிநெஞ்சில் ஈரம் பொங்கும்
        ஈகையெனும் அன்பொழுகும் மனித நேயம்!
 
தேயத்தில் சோர்வின்றி உழைத்த அன்னை
      தெரெசாவும் மண்டேலா பலரும்; மண்ணில்
மாயாத கருணையினால் பேதம் விட்டு
       வளையாத நோக்கத்தில் மாண்பு கொண்டு
சாயத்தில் வெளுக்காத வெள்ளை யுள்ளம்
       சளைக்காமல் தொண்டறத்தில் தனையே ஈந்து
தாயாகி நிற்பதனால் உயிர்கள் யாவும்
        தழைக்கிறது சிரிக்கிறது நேயம் கொண்டே!

*************************************************************************************************
தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்
 
கவியரங்கம் அரியணையில் வீற்றி ருக்கும்
     கவியமுதே சொல்லமுதே வணக்கம் தாயே
புவியரங்கில் தமிழ்ப்பாக்கள் கொத்தாய் தந்த
     பொன்நிலவர் பாவரங்கில் தலைமை ஏற்க
செவியரங்கை இணையத்தால் இணைத்துக் கட்டி
     செந்தமிழில் கனிந்துவரும் கவிதைக் கேட்டுக்
குவிகரங்கள் ஒலியெழுப்பி வாழ்த்துச் சொல்ல
     குவிந்திருக்கும் யாவர்க்கும் வணக்கம் சொல்வேன்!
 
கற்றறிந்தோர் சபையினிலே பெரியோர் முன்னே
     காலத்திற் கேற்றவொரு கவிதைப் பாட
பொற்றவைக்குத் தலைப்பொன்றை நல்கி இங்கு
     பொதுவினிலே பாடயென்னை அழைத்தார்; நானும்
சிற்றறிவுக் கெட்டியதை துணிந்து சொல்ல
      திறம்பெற்றார் முன்னிலையில் வந்து நின்று
நற்றமிழர் வாழ்வதற்கென் னென்ன வேண்டும்
      நற்றமிழ்தான் வேண்டுமென சொல்ல வந்தேன்.
 
தமிழன்னைக் குடிக்கொண்ட தமிழன் நாவில்
     சரித்திரத்தின் பதிவுகளே வீரம் பேசும்
அமிழ்தென்றும் உயிரென்றும் உரைத்தப் பாவும்
      அமிழ்தெங்கே தமிழெங்கே என்றே கூவும்
உமிழ்கின்ற செயலெல்லாம் அரங்கம் காண
     ஓயாமல் உழைக்கின்ற தமிழர் இங்கே
தமிழுக்கென் றென்னசெய்தார் என்று பார்த்தால்
      தயங்காமல் சொல்லிடலாம் ஒன்றும் இல்லை
 
ஒப்புக்கு மொழிப்பற்றைக் காட்ட வந்தோர்
     உருப்படியாய் மொழிக்காக என்ன செய்தார்
உப்புக்குத் தேவையான சோற்றைக் கொட்டி
      ஒழுங்குசெய்யப் பார்க்கின்றார் என்ன சொல்ல
சப்புக்குச் சிலநிகழ்ச்சி வீம்பாய் செய்வார்
      சல்லிக்கும் ஆகாத புரட்டுக் குப்பை
மப்புக்குக் கூடிநின்று பற்றே என்பார்
    மண்குதிரை மரபுவழி வந்த வர்தான்!

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...