ஆண்டருள் முருகா
நாவடி உரைக்கும் சொல்லினிலே
நாயகன் உன்னுள் இணைந்தோமே
காவடி யாடும் ஆடலிலே
காட்சிகள் கோடி கண்டோமே !
தூவலில் நின்னைப் புனைவதற்குத்
தூயனே என்னை ஆண்டருள்வாய் !
ஆவலில் பாடும் பாட்டுக்குள்
ஐங்கர னோடே இணைந்திருப்பாய் !
பாலதைச் சுமத்தல் எம்கடனே!
பாவமே தீர்த்தல் உன்கடனே!
வேலதைச் சுமக்கும் வேலவனே!
வெற்றியைத் தாதா சரவணனே !
நாளிதில் எங்கும் உன்நாமம் !
நானிலம் போற்றிக் கொண்டாடும் !
ஊழியும் இல்லை உனைத்தொழுதால் !
உயர்வதே நாடும் நின்னருளால்
!
*****************************************************************************************
துஞ்சா துழைக்கும் காளைகளைத்
தூய்மை யாகக் குளிப்பாட்டி
மஞ்சள் சிவப்பு வண்ணத்தில்
மாலை யதற்கும் அணிவித்தே
கொஞ்சிக் குலவிக் கொம்புகளைக்
கூராய்த் தீட்டி யரங்கினிலே
மஞ்சு விரட்டும் வீரரையும்
மருளச் செய்வார் இந்நாளில் !
ஊரே திரண்டு பொங்கலிட்டே
உவகை பொங்கக் காளைக்குப்
பாரே வியக்கப் படையலிட்டுப்
பாடி யாடி மகிழ்ந்தபடிச்
சீராய் மாட்டுப் பொங்கலதைச்
சேர்ந்தே சிறக்கக் கொண்டாடிப்
பார்க்கும் உலகம் தோழர்காள் !
பசியும் அடங்கும் காண்பதனால் !