மறந்தா போனீர்?
கங்காணி அழைக்கின்ற குரலைக் கோட்டுக்
காண்டாப்பால் வாளியுடன் ‘பிரட்டு’க் கேயான்
கங்குலிடைத் தடுமாறிச் செல்லுங் காலைக்
கட்டியெனைப் பிடித்தீரே! மறந்தா போனீர்?
கட்டியெனைப் பிடித்திடநீர் பயந்து யானும்
கத்திடுங்கால் என்வாயைப் பொத்தி மெல்லப்
பட்டிதழைத் தொட்டீரே, உமது மீசை
படரிதழால் வலியெடுக்க மறந்தா போனீர்?
நன்முத்தந் தந்தஇளம் மயக்கத் தோடு
நான்’பிரட்’டை நெருங்கிட்ட வேளை ஐயா
உன்பெயரை யழைத்திட்ட போழ்து யானும்
உட’னாஜர்’ சொன்னேனே! மறந்தா போனீர்?
உனக்காக நான்’ஆஜர்’ சொல்லக் கேட்டே
உடனாங்குத் தோழியர்கள் சிரிக்க, ஐயா
“உனக்காக நீயாஜர் சொன்னால் போதும்!
உளறாதே!” என்றாரே! மறந்தா போனீர்!
கங்காணி அன்றொருநாள் மரத்தில் பட்ட
காயத்தைக் காண்பித்தே என்னைத் திட்ட
“ஒங்கையா விட்த்தேபோய்ச் சொல்லு! இங்கே
ஒழுங்காய்ப்பேசு என்றீரே”! மறந்தா போனீர்?
பால்நிறுக்கும் கொட்டகையில் நிறுத்த பாலைப்
படியேறித் தோம்பதிலே ஊற்றும் வேளை
கால்தவறி விழப்பார்த்தேன்; காற்றாய் வந்து
காத்தீரே! கண்ணிமைபோல் மறந்தா போனீர்?
‘தேன்நிலவு’ப் படம்பார்க்கப் பெற்றோ ரோடு
திடல்நோக்கி நான்சென்ற போழ்து பையன்
“வான்மதியாம் உந்தோழி அழைத்தா”ளென்றே
மாற்றியே சொன்னானே! மறந்தா போனீர்?
பையன்சொல் மெய்யென்றே நம்பி நானும்
பாங்கியிருப் பிடந்தேடிச் சென்றேன்! ஆங்குக்
கையதனில் மலரோடு கொக்குப் போன்று
காத்திருந்தீர் கால்கடுக்க மறந்தா போனீர்?
நின்திருட்டுத் தனங்கண்டு பெண்நாள் ஓட
நினைக்கையிலே சேவலைப்போல் பின்தொ டர்ந்து
கண்மூக்கு, கால்கையென் டோர்ந்தி டாது
கடித்தீரே வடுத்தோன்ற மறந்தா போனீர்?
பெற்றோரும் உற்றாரும் முறையாய் வந்து
பெண்கேட்போம் என்றார்த்துச் சொல்லிச் சென்றீர்!
கற்றவரே! நீர்புகன்ற காலம் வீணே
கரைவதனைக் காணீரோ? மறந்தா
போனீர்?
***********************************************************************************************
மூக்கன்: என்னங்க தலைவரே செளக்கி யம்மா?
எத்தனையோ நாளாக உங்க ளைத்தான்
கண்டுவோர் விசயத்தைக் கேட்ப தற்குக்
கமிட்டிங்க இடத்தெல்லாம் கேட்டுப் புட்டேன்.
தலைவர்: எங்கையா போயிட்டேன் மூக்கா? இந்த
ஊரினிலே தான்இருக்கேன்; நேற்றுக் கூட
உங்கையா அரசாங்க மாடு கேட்டு
ஒருபதிலும் இல்லேன்னு சத்தம் போட்டார்.
மூக்கன்: ஆமாங்க அதுஎன்ன சட்ட மன்ற
ஐயாவும் சடையப்பன் கலியா ணத்தில்
ஏமாந்த சனமாக இருக்க வேண்டா
ஏராளத் திட்டங்கள் இருக்குன் னாரே?
தலைவர்: திட்டங்கள் ஏராளம் உண்டு மூக்கா
திட்த்தைப் பெறுகின்ற வழியை நம்மின்
வட்டத்தில் இருக்கின்ற தொகுதி மன்ற
வாக்கீல்ரா யாட்டிடம் கலத்தல் வேண்டும்.
மூக்கன்: அதுஎன்ன எளவோங்க நமக்கு யாரும்
ஐயாவை வுட்டாபின் தெரியா துங்க
எதுக்குன்னு தெரியாது எனக்கோர் சூரா
எங்கிருந்தோ வந்திருக்கு இதோபா ருங்க.
தலைவர்: என்னப்பா மூக்காநீ கொஞ்சங் கூட
விவஸ்தையே இல்லாமல் இருக்கின் றாயே
சென்றாண்டு நிலத்திற்கு நீங்க ளெல்லாம்
சேர்ந்தெழுதிப் போட்டிட்ட மனுவை டீ.ஒ.
நன்றாய்ந்து நம்தொகுதிச் சட்ட மன்ற
நாடாளு மன்றங்கத் தினர்க ளோடு
‘இண்டர்வியூ’க் காகத்தான் இந்தச் சூரா
இதுமுடிந்து ஒருவாரம் ஆச்சு தப்பா!
மூக்கன்: ……………………………………?