இரண்டாம் தடுப்பூசி
தரணி தனையே முடமாக்கித்
தாண்ட வமாடும் கோறனியை
விரைவாய் ஒழித்துக் கட்டிடவே
விரைந்து கண்டார் தடுப்பூசி!
வரமாய்க் கிடைத்த அம்மருந்தை
வயதில் மூத்த பெரியோர்க்கே
அரணாய் அமைக்க அரசாங்கம்
ஆய்ந்து தெளிந்து போட்டதுவே!
புதிய சட்டம் ஒன்றனைத்தான்
பொதுவில் கொண்டு வந்தரசு
மதித்தே ஊசி இரண்டுமுறை
மறவா மல்நீ போட்டால்தான்
விதியை மாற்ற வழிபிறக்கும்
விரைந்து உலகம் நலம்நாடும்!
அதனால் இளையோர் அனைவருமே
அதனைப் பெறவே விரைந்திடுவீர்!
வயதில் மூத்த பெரியோர்தம்
மக்கள் நிழலில் வாழுவதால்
சுயமாய் எங்கும் செல்வதற்கும்
துணிவே யின்றிக் கலங்குகின்றார்!
துயரில் வாழும் முதியோரின்
துன்பந் தனைத்தான் அரசறிந்தே
புயலாய்த் தடுப்பு மருந்தினையே
போட்டு முடித்தல் சிறப்பன்றோ!
*********************************************************************************
கந்தா கடம்பா கதிர்வேலா
காப்பாய் உலகைத் திருக்குமரா!
வெந்தே மண்ணில் வாடுகின்றோம்
விடிவைத் தரவே விரைந்தேவா!
சொந்தந் தனையே தூரவைத்தோம்
தொட்டுப் பேச அஞ்சிநின்றோம்!
பந்தி யனைத்தும் ஒதுக்கிவைத்தும்
பரவும் தொற்றோ குறையவில்லை!
வீடு தோறும் வேதனைகள்
விஞ்சி நின்றே ஆடிடுதே!
காடும் கொள்ளா பிணக்குவியல்
கண்டே மனமும் கலங்கிடுதே!
நாடும் வீடும் நலம்காண
நாடி யுன்னை வேண்டிநின்றோம்!
கேடு யாவும் போயகல
கிருபா கரனே அருள்புரிவாய்!