தமிழ்த்தொண்டு
தென்றல்
தென்றலே! நீயும் சுகத்தினை யூட்டத் தென்றிசையில் நின்று வருவதேன் நித்தமும் அன்புடன் நீள்புவிக்கு? என்றும் தமிழமு துண்டிடின் இன்பென, இப்புவியில் கண்டனைக் கொல்லோ களிப்புடன் தென்றிசை கொண்டனையோ!
மலர்
சித்திரப் பூவே! சிரிப்பொடு நின்றுநீ தென்றலிலே நித்தமும் ஆடி மகிழ்ந்திடும் வேளையில், நின்மணத்தை இத்தரை மீதினில் எங்கும் பரப்பிடும் எண்ணமுமேன்? தித்திக்கும் செந்தமிழ் சேர்ந்திட்ட நன்மணம் செப்புதற்கோ!
வண்டு
வண்ண மலரினைத் தேடியே சென்றிடும் வண்டினங்காள்! சின்னஞ் சிறிய சிறகை விரித்துமே செல்வதெல்லாம் வண்ண மிகுமலர்ச் சோலையில் வந்துறை காதலர்க்குப் பண்ணும் இசைத்துப் பழந்தமிழ் மாண்பைப் பகருதற்கோ!
மாலை
மண்ணிசை தோன்றிநல் வானுற வோங்கிய மாமலையே விண்ணைக் கிழித்திடும் தன்மையில் நின்றுமே மேதினியில் கண்ணைக் கவர்ந்திடும் மேகத் திரளினைக் காலடியில் கொண்டு குவித்தலும் தண்டமிழ்த் தன்திறன் கூறுதற்கோ!
கடல்
அல்லும் பகலும் அலுப்பு மிலாமலே அம்புவிக்குச் சொல்லும் மொழியாதோ? சொல்லிடு வாய்நீ திரைக்கடலே! கல்லும் கவிதைகள் பாடும் பெருமையைக் கற்றுமேநீ வல்ல தமிழ்மொழி மாண்பினைச் சொல்லும் வளர்பணியோ
குயில்
கங்குற் கருங்குயி லே! தமிழ் கற்றுக் களிப்புடனே சங்க இலக்கியம் தந்திடும் இன்பினைச் சாற்றிடவும் எங்கும் பறந்துநீ இப்புவி தன்னில் இசைத்தமிழைப் பொங்கிடும் ஆவலால் நிண்றுப் பணிசெயப் போந்தனையோ!
மயில்
மயிலே! வளர்தமிழ் மாண்புறக் கற்றுநீ, மாநிலத்தில் ஒயிலாய் நடந்திட ஒண்டமிழ்க் கூத்தும் ஒழுங்குடனே பயின்று நடமிடும் பண்பினில் தேரிய பான்மையினால் இயலிசை விட்டுநீ இன்றமிழ்க் கூத்துக் கிசைந்தனையோ!
கிளி
‘மங்காத் தமிழ்மொழி மாசறக் கற்றுநீ வையகத்தில் எங்கும் பரப்பிட ஏற்றம் பெறவிலே’ என்றுபலர் ‘பங்கம் அடைந்திடும் பைந்தமிழ்’ என்றுமே பைங்கிளியே! சங்கப் புலவரும் சாற்றினர் ஆயினும், தாழ்ந்தனையோ!
மங்கை
வண்டமிழ் வாழ்வு வளமுடன்
கண்டு மகிழ்வுறவே கொண்ட இயலிசை கூத்தெனும் முத்தமிழ் கூட்டுவிக்கும் கெண்டை
விழிநிகர் மாதர் அணைப்பிலே ஆடவரும் கண்டு மகிழ்ந்திடச் செய்வதும்; மாத்தமிழ் காட்டுதற்கோ!