திருமுருகன் மணம் வீசும்
உள்ளமதில் நிறைந்தோனே! ஓங்காரத் தத்துவனே!
தெள்ளமுதாம் செந்தமிழைத் திகட்டாமல் தந்தோனே!
வள்ளியம்மை தெய்வானை! வடிவேலன் இருபுறமே!
துள்ளியெழும் மயில்தாங்க! துணையாக வந்தருளே!
நெற்றிக்கண் உதித்தோனே! நெஞ்சத்தில் உறைந்தோனே
குற்றஞ்சூழ் சூரனையே குலைநடுங்கச் செய்தோனே
நற்றமிழ்த்தாய் ஒளவையிடம் ஞானமொழி கேட்டோனே!
வெற்றிதரும் வேல்பெற்றோய் திருச்செந்தூர் சிதைத்தோனே!
ஆறுபடை உம்வீடு அனைத்தும்உன் புகழ்பாடும்!
காருண்ய மூர்த்திநீ கனகமயில் வாகனன்நீ!
வேறுதுணை எனக்கில்லை வேலவனே நீமுல்லை!
தேருலாவும்
தைப்பூசம்! திருமுருகன் மணம்வீசும்!
*********************************************************************************************
அந்நியர்கள் மலைநாட்டை ஆண்ட கோலம்
அச்சத்தின் உச்சமதாய் அடிமை கொண்டார்
சொந்தமெனும் பிறந்தகத்தில் சோக முற்றோம்
சொல்லொண்ணா வேதனையில் துடிக்க லானோம்
எந்தையர்கள் தனையழித்தே தியாகம் செய்தார்
எழுகதிராய் மூவினமும் எழுச்சி கொண்டோம்
தங்கமனத் துங்குவந்தே தலைமை ஏற்றார்
தணியாத சுதந்திரத்தின் தாகம் தீர்த்தார் !
மண்ணகமும் மலர்தூவ மணமும் சூழும்
மரபோடு குணமேவ மகிமை கூடும்
எண்ணமது விண்ணேறி வீறு கொள்ளும்
இழிவான பழிநீங்கி இன்பம் துள்ளும்
உண்ணிடவும் உறங்கிடவும் அமைதி காணும்
உலகோரைச் சோதரராய் உறவாய்ப் பேணும்
பொன்னொளிரும் சுதந்திரத்தால் புதுமை நல்கும்
புத்துலகு நமதாக்கம் சரிதை சொல்லும்!
பேரரசர் ஆளுகையாம் பெரியோன் காப்பாம்
புலனைந்தும் பூரிப்பால் புலரும் யாவும்
போரறியாப் பெருவீரம் புயலாம் தோள்கள்
பொருள்தேடி வருவோர்க்கும் புதையல் காட்டும்
மாரியென மழைபொழிய வளமை கூட்டும்.
மகத்தான ஒற்றுமையே பெருமை சேர்க்கும்
வேரெனவே வித்தெனவே அரணாய் நிற்போம்
வெற்றிமிகுக்
குமுகாயம் நமதாய்க் காண்போம் !