கவிஞர் திருமாமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞர் திருமாமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிஞர் திருமாமணி, பினாங்கு


 

பாட்டு

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும்
    உலகம் எனக்கொரு பாட்டு!
ஒவ்வொரு மனிதரும் அவரவர் குணமும்
    உணர்த்தும் பற்பல பாட்டு!
 
ஒவ்வொரு நாளும் பாடம் புகட்டும்
    உலகம் எனக்கொரு பாட்டு!
ஒவ்வொரு மனிதர் உள்ளத் தினிலும்
    உறங்குவ திந்தப் பாட்டு!
 
என்னுள் எங்கோ இருந்து வெளியே
    எழுவது தானே பாட்டு!
கண்ணீர் போல கனன்று பாய்ந்து
    கருத்தை நனைப்பது பாட்டு!
 
புலவர் எழுதிப் புலவர் வியக்கப்
    புனைவது அல்ல பாட்டு!
உலக மக்கள் மனங்களில் எளிதாய்
    ஓடிக் கலப்பது பாட்டு!
 
நாக்கினில் உதிரும் நறுக்கு வசனம்
     நவிலுதல் அல்ல பாட்டு!
பூக்களைத் தொடுப்பது போலது சரமாய்ப்
    புணர்ந்து வருவது பாட்டு!
 
ஆயிர மாயிர ஆண்டுகள் முன்னம்
    ஆனதாம் நமது பாட்டு!
போயதை இன்று புதுவர வோடு
    பொருத்துவ தல்ல பாட்டு!
 
உலகம் செழிக்க உதவும் வழியை
    உரைப்பது நல்ல பாட்டு!
பழகும் தமிழில் பதமிட் டறிவுப்
    பசியைத் தீர்ப்பது பாட்டு!
 
உணர்வும் ஓசையும் உயரிய கருத்தும்
    ஒன்றாய்க் கலந்தது பாட்டு!
உணர்வே இல்லா மனிதரைக் கூட
    உணரச் செய்வது பாட்டு!
 
நூறடிப் பாட்டுள் நுண்ணிய புலமை
    நுவலுதல் அல்ல பாட்டு
ஈரடிக் குள்ளே இனிய கருத்தை
    இருக்கச் செய்வதும் பாட்டு
 
ஒருவர் புகழை ஊரார் கேட்க
       உரைப்பது அல்ல பாட்டு!
ஒருவரை ஒருவர் சம்மாய்ப் பழக
    ஊக்கம் தருவது பாட்டு!
 
எதுதான் பாட்டு என்பவர் தமக்கும்
    இருக்குது நல்ல பாட்டு!
அதுதான் எங்கள் பாரதிப் புலவன்
    அழகிய செந்தமிழ்ப் பாட்டு!

**************************************************************************************

திருக்குறளும் இணையமும் ஒன்றா?
 
எல்லாப் பொருளும் இதன்பால் உளதால்
இணையம் திருக்குறள் இரண்டும் ஒன்றாம்!
என்றொரு வாதம் இங்கே வந்தது.
நமக்கேன் வம்பென நழுவி விடாமல்
எண்ணிய கருத்தை எழுதிடத் துணிந்தேன்!
எங்கோ தொலைவில் இருப்பதை நம்முடன்
இணைப்பது இணையம்; மனைக்குள் இருந்தே
உலகைச்  சுற்றி வலம்வர ஏலும்
மின்னலை மிஞ்சும் மின்னியல் வேகம்.
அள்ளக் குறையா அமுத சுரபியாய்
நாடிய பொருளைத் தேடியே எடுக்கும்.
திகைக்க வைக்கும் திருக்குறள் போல
அகப்புறத் தகவல் அனைத்தும் கொண்டது.
நல்லன தீயன எல்லாம் உள்ளது.
நிறைகுறை செய்திகள் நிறையவே கொண்டது.
எல்லாப் பொருளும் இதன்பால் உள்ளதாய்
இனிய குறளை இயம்புதல் காலை
சீப்பு சோப்பு செருப்பு கண்ணாடி
எக்கு தகரம் இரும்புகள் என்பன
எல்லாம் உள்ளதாய் எண்ணுதல் தவறு
‘எல்லாப் பொருளும்’ என்பது யாதெனின்
மனிதன் என்றும் மனிதனாய் வாழ
எல்லாக் கருத்தும் இருப்பதே ஆகும்!
பொய்யாக் குறளும் புதுவிஞ் ஞான
இணையத் தளமும் ஒன்றா
என்பதை எண்ணிப் பார்த்திடு வாயே!

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...