யார் குற்றம்?
இளையோரின் இறப்புமிங்கே இடியாய் நெஞ்சில்
இறங்குதய்யா ஏற்புடைய தாசொல்லீர்!
விளையும்வி ளைச்சலிங்கே வீணாய் மண்ணில்
வீழ்ந்திடுதல் நியாயமிதோ விளம்பிடுவீர்!
இளையர்கள் இல்லமதில் வளரும் வாழ்வு
எப்படியோ அப்படித்தான் வெளிவாழ்வும்!
களையில்லா வாழ்வுதனை கற்றுத் தாரீர்,
கண்டபடி ஊர்மேய்தல் கடிதொழியும்!
குழலையொத்த மழலைமொழி கேளார் யாரோ
கொஞ்சுமொழி யழகினிலே மயங்கார்யார்?
தழலையொத்த பேச்சையிங்கே அவனோ சிந்த
தலைகுனிவார் பல்லோரின் மானம்போம்!
மழலைகண்ட மொழியுமிங்கே மண்ணாய்ப் போக,
மண்டையுடை காட்சிகள்தான் அரங்கேறும்!
குழந்தைபெற்றார் வளர்ப்பினிலே கோட்டை விட்டால்
கொலைகாரப் பட்டந்தான் கூடவரும்!
இனவுணர்வு இந்நாட்டில் என்று முண்டே
இடமறிந்து நிற்குங்கால் இடரில்லை,
மனங்களிலே இழைந்தோடும் அவ்வு ணர்வை
வளர்த்துவிட பள்ளியுண்டாம் பாடமறி.
தினந்தினமே பணங்காண திசையே மாறி,
செல்லுங்கால் சிறைபடுவாய் தெரிந்துகொள்.
மனத்தினிலே நல்லொழுக்க மில்லை என்றால்
மடிவதுமே தினம்நடக்கும் மனதில்வை!
********************************************************************************************
கன்னித்த மிழ்மொழியில்
காலமெலாம் கவியெழுத
உன்னைத்தான் உலகினுக்கே
உவந்தளித்தான் ஈசனவன்,
எண்ணத்தில் வைத்திடவே
எழுத்தெல்லாம் மணம்பரப்ப
அன்னைக்கு மணிமகுடம்
அழகுடனே படைத்திட்டாய்!
தமிழைத்தான் அமுதமென்றாய்
தன்மானம் விதைத்திட்டாய்,
இமையுந்தான் மூடாது
எழுச்சிமிகு உணர்வுகளால்
இமயம்போல் நிமிர்ந்திடவே
இனிதெனவே செதுக்கிட்டாய்
அமையாது உனையுமின்றி
அடுத்ததொரு அறிவுலகம்.
சுட்டெரிக்கும் சுடர்மொழியால்
தூள்பறக்கும் பேதமைகள்,
வெட்டவெளி கதிரொளியில்
வீழ்ந்துபடும் வேதனைகள்
தொட்டதெலாம் துலங்கிடவே
தோழிகளு முடன்வருவர்
விட்டுவிட்ட பெண்ணியமும்
விளக்கேந்தி மணம்பரப்ப!
வாழ்ந்திடவே நினதுபுகழ்
வளர்மதியாய் நிலவுலகில்
தாழ்ந்தயின மெதுவுமில்லை
தமிழ்மணக்க விதைத்திடுவோம்,
ஆழ்கடலுள் அலைகளில்லை
அமைதியிங்கு நிலைபெறவே!
வீழ்ந்திடவே தமிழரில்லை
விண்ணோக்கி எழுந்திடுவோம்!