பண்ணை மலைநாடு
வண்டு மலரூத வசந்தம் மருவிட
வானத்து வட்டநிலா
வளர்ந்து கவின்கூட்ட வைரமணித் தாரகைகள்
வார்க்கும் தண்ணொளி
குண்டு மலர்மல்லி குழல்விரித்த நறுமணம்
குழைந்தே இதழ்காட்ட
கொவ்வைக் கனியமுது கோலக் கருமுகில்
கூவும் குயிலினத்தைக்
கண்டு விளையாடும் நீலக் கடலொலியில்
கலைகூட்டும் கயலினம்
கதிர்வீசும் பவளநிறக் கதிரவன் கீழ்உதயக்
காட்சி சேர்வைகை
பண்டு சரிதையைப் பரத்தும் பொன்னோடு
பண்பாடும் புலமையிலே
பளிச்சிடும் தங்கவயல் பால்ஊற்று ரப்பர், ஈயம்
பண்ணை மலைநாடு!
*****************************************************************************************
மனச்சிறகுகள்வானில் சிறகுகள் விரிக்கிறது – மனம்
வட்ட நிலாவில் குளிக்கிறது!
வேனில் கூதல் காய்கிறது – ஒரு
விதையில் விருட்சம் காண்கிறது!
உலகம் சுற்றச் செல்கிறது – மனம்
உறவைப் பெருக்கிக் கொள்கிறது!
அழகை நாடிப் போகிறது – அதில்
ஆழம் காட்ட மறுக்கிறது!
தடைகள் கடந்தும் நிள்கிறது – மனம்
தாளம் போட்டுக் குதிக்கிறது!
விடைகள் கேட்டுத் தெளிகிறது – பெரும்
வெள்ளம் போலப் பாய்கிறது!
புதுமை நோக்கி நடக்கிறது – மனம்
பொக்கிஷ மாக இருக்கிறது!
பொதுமை தேடித் துடிக்கிறது – மதுப்
புகழில் இன்பம் காண்கிறது!
கட்டுப் பாடுகள் உடைக்கிறது – மனம்
கவிதை பாடிக் களிக்கிறது!
எட்டும் வரைகள் இல்லாமல் – அந்த
எட்டாக்
கோள்களில் நுழைகிறது!