சிரிப்பு
வெள்ளந்திச் சிரிப்பினிலே வேலைச்சு மைகளிலே
கள்ளங்கள் இல்லாமல் காண்கின்ற புன்னகையில்
துள்ளித்தான் மறைந்திடுமோ துயரத்தின் கண்ணீரும்
அள்ளித்தான் அணைத்திடுமோ ஆனந்த அலைகளுமே
புல்லுமே கனக்கலையே புன்னகையும் மலர்கையிலே
கல்லாகும் இதயங்கள் கால்தூசி தானென்று
வில்லேந்தும் வீரத்தில் வீசிநடை யிடுகின்ற
முல்லைப்பூ மெல்லியரும் மேன்மையதும் கொண்டவரே
சிரிப்புக்கும் பஞ்சமென்று சிடுசிடுக்கும் முகம்காட்டி
கரிப்பான சுவையெனவே கடுமையுடன் நோக்குகின்ற
நரிப்பண்பு படைத்தவரில் நங்கையிவர் பூஞ்சிரிப்பு
விரிப்பாகும் தோகையதை விஞ்சுகின்ற
பேரழகு...!
******************************************************************************************
அன்பினைத்தான் காதலென்றார்
அழகான உணர்வுமென்றார்
இன்பமதின் இளகளென்றார்
இதயத்தின் உருகலென்றார்
துன்பியலும் அற்றதொரு
தூயன்பும் இங்கில்லை
மன்பதையில் காணுகின்ற
மாற்றங்கள் நோக்கயிலே
பள்ளிகளில் காதலரும்
பண்பின்றி பெருகிவிட்டார்
கள்ளியதன் நஞ்செனவே
காதலிங்கே ஆனதய்யோ
புள்ளியிடும் கோலமெல்லாம்
புனிதமென ஆகிடுமோ
கிள்ளுகின்ற உணர்ச்சியதும்
கீழ்த்தரமாய்ப் போகயிலே
இலக்கியத்தில் காதலதை
இனிமையுடன் எடுத்துரைத்தார்
துலக்கியிடும் தீபமென
தூய்மையுடன் வார்த்தெடுத்தார்
கலக்கிவிடும் குட்டையென
காதலின்று மலிவாகி
மலைத்திடுமே நிலையிலது
மானமதும் இழந்ததிலே
காறித்தான் உமிழ்கின்றார்
காதலெனும் சொல்கேட்டே
மாறித்தான் பண்பாடும்
மதிப்பின்றி போனதினால்
நாறித்தான் போனதிங்கு
நயமான காதலுமே
தேறித்தான் போகவில்லை
தெய்வீகக் காதலென்றே...!