என் தந்தை
என்அன்புத் தந்தையவர் எளிமையெனில் மகிழ்ந்திடுவார்!
இன்முகத்தால் அனைவரையும் ஈர்த்திழுக்க முனைந்திடுவார்!
துன்பத்தைக் காட்டாமல் துயரத்தைச் சொல்லாமல்;
இன்பத்தை மட்டிலுமே ங்களுக்காய்ச் சேர்த்திடுவார்!
அன்னைமுகம் வாடாமல் அன்பொழுகக் காத்திடுவார்!
சின்னவலி என்றாலும் சிந்திக்கத் தவறிடுவார்!
என்னவிது என்போர்க்கும் ஏற்றபதில் உரைத்திடுவார்;
என்மனைவி என்னுயிரில் என்னில்பா தியென்பாரே!
நன்றாக நாவினிக்க நற்சமையல் சமைத்திடுவார்!
ஒன்றாக அமரவைத்தே உணவருந்தச் செய்திடுவார்!
முன்னாலே அவரிருந்தால் முழுஉலகம் என்னதுபோல்;
தன்னாலே உணர்ந்திடுவேன்
தலைநிமிர்ந்து நடந்திடுவேன்!
*********************************************************************************
நாதியுற்று நம்மக்கள் நடுத்தெருவில் நின்றிருக்க
நானிருக்க பயமேனே எம்மக்கான் என்றணைத்து
விதியொன்று செய்திடுவோம் விரைவினில் வாருங்கள்
விரக்தியினை விரட்டிடுவோம் வீறுநடைப் போடுங்கள்
உழைப்பவர்கள் நினைத்தால்தான் உலகையே ஆட்டிடலாம்
உண்மையை உணர்த்திவிட்டே ஒன்றிணைந்து காட்டிடலாம்
பிழைப்புக்கு வழியின்றேல் புலம்புவதால் தீர்ந்திடுமோ
பிரச்னைகள் தீர்ந்துவிட அதுவழியா கூறுங்கள்?
ஒன்றுபட்டால் உண்டுவாழ்(வு) என்பதனை செயல்படுத்தி
ஒற்றுமையின் பலத்தாலோ எத்துயரும் வெல்வதற்கு
தோன்றிட்ட ஒருதலைவர் சீலர்ஞான சம்பந்தர்
தோற்காத நெஞ்சரவர் தொழிலாளர் துணைவரவர்!
பத்துபத்தாய் சேர்த்தனைப் பாங்குடனே சொத்தாக்கி
பத்திரமாய் கரைசேர்த்து பைந்தமிழர் வாழ்வினிலே
சத்தமின்றிப் புதுசகாப்தம் செய்திட்ட தங்கமகன்
சங்கநதி தந்தசெல்வம் சம்பந்தர் தானன்றே?
நாட்டைச்சுற்றி வலம்வந்து நல்லதையே எடுத்துரைத்தார்
நாளைநம தெங்குணர்ந்து நன்மக்கள் விழித்தெழுந்தார்
பாட்டாளித் தோட்டமென்று சுங்கைபிலேச் சுருதிமீட்ட
பாரெல்லாம் புகழ்மணக்க பண்புடையார் மனம்நிறைந்தார்!
மண்ணுலகம் உள்ளவரை மைந்தரவர் புகழ்பாடி
மறவரவர் மாண்புக்கு மறவாது கவிபாடி
விண்ணுலகம் சென்றிடினும் வான்புகழ் வல்லவரின்
வாழும்புகழ் என்றென்றும்
வரலாறாய் நிலைத்திடுமே!