வாழ்க அம்மா
யாப்பதனைக் கற்பதற்குத் தூண்டு கோலாய் ,
இங்கிருவர் வந்துதித்தார் தெய்வம் போல !
பாப்புனையும் பரம்பரையைப் பெருக்க நாளும்
பணிச்சுமையைக் கனிச்சுமையாய் தோளில் ஏற்றி,
பூப்போலப் புல்லரும்புப் பனியைப் போல,
போதிப்பார், சாதிப்பார், சிகரம் செல்வார் !
காப்பதற்கும் கவிதைவெள்ளம் பாய்வ தற்கும் ,
காலமெல்லாம் துணையிருப்பார் முனைவர் இங்கே !
நாட்டினிலே தோய்ந்திருக்கும் மரபு வேரை,
நலிந்திருக்கும் நிலைமாறி செழிப்ப தற்கே ,
வீட்டினிலே கற்றிடவே வாய்ப்ப ளித்தார்,
விளங்கிடவும் எளிதான வழிகள் செய்தார் !
ஏட்டினிலே அச்சேற்றி மகிழ வைத்தார் !
இளையோரைப் பண்படுத்தி உயர வைத்தார் !
போட்டியிலும் பங்கெடுத்தே வெல்ல வைத்தார்!
போர்க்களத்தில் வீரனைப்போல் பாயச் செய்தார் !
கற்றவர்கள் எத்தனையோ நமக்குள் இருக்க,
கருதாதப் போக்கினையே கண்டு வந்தோம் !
பெற்றவர்கள் பேணுகின்ற பிள்ளைப் போல,
பெருந்தவத்தால் எங்களுக்கே தாயாய் வந்தீர் !
நற்றமிழின் வித்தையெல்லாம் கற்கச் செய்து ,
நற்பணியாய் நாளெல்லாம் செய்யும் நன்மை !
உற்றதொரு இறைக்கவிஞர் சீனி அய்யா
உயிர்ப்பெற்று வந்ததுபோல் வாழ்க அம்மா !
********************************************************************************************
தேசியத்தின் முழக்கமின்று
திசையெங்கும் ஒலிக்கட்டும்
ஆசியத்தின் முகமென்றே
அகிலத்தில் விளங்கட்டும்
வந்தேறி , குடியேறி
வசைபாடிக் களிப்போரும்
சிந்தித்திங்(கு) அடங்கட்டும்
சிந்தனையில் மாறட்டும்
இனமென்றும் மதமென்றும்
இழிநாவால் சுடுகின்ற
மனமெல்லாம் மாயட்டும் ;
மனிதத்தைப் போற்றட்டும்
ஓரினம்தான் ஆளுமென்ற
ஓலங்கள் அடங்கட்டும் !
பாரினங்கள் வாழுகின்ற
பாதையெங்கும் விரியட்டும்
பேசுவதைச் செய்யட்டும்
பிரிவினைகள் ஒழியட்டும்
காசுபணம் குறிகொண்ட
கள்வர்களும் சாகட்டும் !
தடுமாறும் தர்மங்கள்
தடம்மாறிப் போகாது !
நடுநிலையாம் மனுநீதி
நடக்கட்டும் இங்கெவர்க்கும் !
உழைத்தவர்கள் நம்மவர்கள்
உரிமையினைப் பெற்றிடுவோம் !
தழைத்துநின்று தொழில்வளத்தில்
தன்மானம் காத்திடுவோம் !
மலேசியமே ஒருமையென்ற
மாண்புமிகு நிலையிங்கு
வலம்வந்தே நிலைக்கட்டும் !
வளமெல்லாம் பெருகட்டும் !