ஞானச் சிதறல்!
பித்தனைப் போலினி பேசா தார்ப்பினும்
மொத்தமும் செல்வதை முடித்தென் னாண்டவன்
சித்தமே வாழ்வென சிரமம் நீங்கியான்
சுத்தமாம் வெளிதரும் சுகத்தில் உய்வனே!
பற்றிய தீயிலும் பயனைக் காணலாம்
சுற்றிய பேர்தரும் சுகமும் என்னவோ
வற்றிய பொய்மன வலையைத் தாண்டியே
முற்றிலும் தீதிலா முழுமை காண்பனே!
கொண்டவிவ் வுடலினை கோயில் ஆக்கியே
மண்டலப் பூசைகள் மாலை அர்ச்சனை
தண்டங்கள் இன்றியே தனிமை மோனத்தை
உண்டுநான் கிடந்திட உலகம்
சுற்றுமே!
******************************************************************************************
எழுதிவிட்டுப் போனவர்கள்
எல்லாரும் சொன்னவற்றை
எழுதிடவோ எடுத்திடவோ
எனக்கேதும் எண்ணமில்லை!
புழுதியிலே காணாமல்
போனவையும் இருப்பதனால்
பொழுதிதனைப் பற்றிமட்டும்
புலம்புவதில் ஆசைவைத்தேன்!
இறக்காத உயிர்மீதே
என்கவனம் உள்ளதனால்
இறந்துவிட்ட பிணப்பொழுதை
ஏறிட்டும் பார்ப்பதில்லை!
திறக்காதக் கதவுகளைத்
திட்டுவதை விட்டுவிட்டேன்!
சிறக்காத தேதுமில்லை
சிரம்தாழ்த்திக் கைகுவித்தேன்!
தத்துவங்கள் தோற்றுவிடும்
தனிப்பெருமை மாய்ந்துவிடும்
புத்தகங்கள் சொல்வனவும்
புத்தியொடு நின்றுவிடும்!
அத்துவிதம் துவிதமெனும்
அழுக்கெல்லாம் அகன்றுவிடும்!
சுத்தவெளி அருகமைய
சுடரெல்லாம் நமக்காகும்!
உருவில்லா நிறைபொருளை
உணர்ந்துவிடும் கணம்வாய்க்க
தெருவெல்லாம் அலைந்திடவும்
தெரிந்தேநான் ஒப்பிடுவேன்!
கருவில்லா இவ்வுடலைக்
கடந்துவிட மனம்மறைந்து
திருவெல்லாம் வாய்த்திடவே
தீர்க்கமுடன் நான்நடப்பேன்!!