இலக்கியக் காட்சி
செவ்வாயில் வந்திடுவேன் செங்கதிரோன் சாயுமுன்னே
சொல்லிவிட்டுத் தலைவனவன் சென்றானே; திரும்பிவந்து
கொவ்வையிதழ் சிவக்கும்படி கொடுத்திடுவேன் முத்தமென
கோலமயில் தலைவிக்குக் கொடுத்தானே வாக்குறுதி!
போனவனை எண்ணியெண்ணி பொன்மயிலாள் வாடுகிறாள்
பொற்கொடியாள் துடிக்கின்ற புழுவாக ஆகிவிட்டாள்
கானமழை எங்கிருந்தோ காதலின்ப உணர்வூட்ட
கட்டிலிலே படுத்தவள்தான் கனவுலகம் சென்றனளே!
அன்றொருநாள் தலைவனோடு அழகுமலர்க் காட்டினிலே
அசைந்தாடும் தென்றலுடன் ஆம்பலுமே இணைந்தாற்போல்
மன்னவனாம் காதலனும் மங்கையரின் உடலணைத்த
மயக்கமுறு சந்திப்பைக் கனவினிலே கண்டனளே!
சோலைவனக் குயிலொன்று சுகராக கானத்தால்
சேர்ந்திருந்த காதலர்கள் வாழையடி வாழ்கவென
கோலமுடன் இசையாலே வாழ்த்தியதாய் அக்காட்சி
கோதையவள் மனதுக்குள் கோடியின்பம் தந்ததுவாம்!
குற்றாலக் குறவஞ்சி கவிராயர் இராசப்பர்
குரங்குகளின் பேரன்பைப் பாடியவர்; பிறந்துவந்து
பொற்றாள இசைக்கூட்டி பொன்றமிழில் பாவெழுதி
பாடுவாரா இவ்விணையர் பேரின்பக் காதலைதான்?
அள்ளிடுமாம் உள்ளத்தை அழகொளிரும் ஓவியமாய்
அகத்திணையில் வருகின்ற இலக்கியத்தின் காட்சிகளோ
சொல்லிடுமாம் தமிழர்களின் சுவையூட்டும் களவியலை
சொக்கிடுவோம் சுடர்மிகுந்த தமிழமுதைப் பருகையிலே!
*********************************************************************************************
மழையின் மாட்சி
வானின்று வருகின்ற மழையின் அருளால்
வாழ்கின்ற பல்லுயிர்கள் உலகில் கோடி
தேனென்றும் அமுதென்றும் மழையை சொல்வர்
தெய்வத்தின் அருளாலே வாய்த்த செல்வம்
ஊனுக்குள் உயிர்தங்க உதவும் மழையால்
உலகத்தின் செழிப்பெல்லாம் ஓங்கும் என்றும்
கானுக்குள் பசுமையெனும் காட்சி துலங்கும்
கவினார்ந்த பறவைகளும் களித்து சிலிர்க்கும்!
பயிருக்குள் விழுகின்ற மழையின் நீரால்
பசியென்ற நெருப்பணைந்து உயிர்கள் வாழும்
வெயிலுக்குள் நின்றுகொண்டு வேலை செய்வோர்
வாராதோ மழையென்று வானம் பார்ப்பர்
மயிலுக்கும் ஆனந்த உணர்வு தோன்றும்
மழைமேகம் கண்டுவிட்டால் தோகை விரிக்கும்
குயிலுக்கும்கொண்டாட்டம் குலவும் உடலில்
குரலெடுத்துக் கூவிடுமே கிளையில் அமர்ந்து!
ஆலயத்தில் பூசனைகள் நின்று போகும்
அகிலத்தில் வான்மழையும் பொய்த்து விட்டால்
சோலைவனம் தண்னெழிலில் திரிந்து வாடும்
சலசலக்கும் அருவிகூட வறட்சி கொள்ளும்
ஏழைமக்கள் உழவர்கள் ஏங்கி நிற்பர்
இடியிடிக்கும் ஒலிகேட்டு இதயம் மகிழ்வர்
வேளையிலே வருகின்ற மழையின் தயவால்
வேளாண்மை செழித்திருக்க வாழும் உலகம்!
வளத்திற்கே ஆதாரம் மழைதான் மண்ணில்
வண்ணங்கள் பூப்பதுவும் அதனால் தானே
நலமெல்லாம் நானிலத்தில் நடனம் ஆடும்
நற்பயிர்கள் விளைச்சலினால் வயிறு நிரம்பும்
புலனுக்குள் இக்கருத்தைப் புகுத்திக் கொண்டு
புவிகாக்கும் மழைக்கென்றும்நன்றி சொல்வோம்
உளங்கொள்ளும் உலகமறை உயர்த்திப் போற்றும்
உயிர்கொடுக்கும் மழைநீரும் இறைமை என்றே!