பாருள்ளவரை வாழ்வாய்
பொதிகை மலையில் பிறந்து
பூவுல கெல்லாம் பரந்து
மதுரைப் பதியில் இருந்து
மன்னர் பலரால் வளர்ந்து
மதிபோல் உலகில் ஒளிர்ந்து
மாறா இளமை கொண்டு
சதியால் அழியா உருவாய்த்
தனித்தே இயங்கு கின்றாய்
உலகில் மொழியின் முதலாய்
உதித்தாய் உன்னின் பெருமை
அழகில் எழிலில் உயர்ந்தாய்!
அழிய கலைகள் தந்தாய்!
பலனில் பயனில் சிறந்தாய்
பாரில் மேலும் மிளிர்ந்தாய்
நிலத்தில் நீதி தந்தாய்
நெஞ்சில் ஓவிய மானாய்
உடலும் உயிரு மானாய்
உள்ளும் புறமும் ஆனாய்
கடல்சூழ் உலகம் போற்றும்
கவின்மிகு குறளா மானாய்
மடலும் மணமும் போல
மணியும் சிலம்பும் தந்தாய்
அடைவைத் தந்தாய் மேலும்
அறிஞர் பலரை ஈந்தாய்
அன்னியர் நின்னெழில் கண்டே
அன்புடன் அரவணைத் துன்னைப்
பொன்னெனப் புகழ்ந்து போற்றிப்
புகுத்தினர் தம்மின் மொழியில்
கன்னியே நின்றன் உயர்வைக்
காசினி புகழு தம்மா!
உன்னிலும் உயர்ந்து காணும்
ஒருமொழி கண்டா ருண்டோ?
நந்தா ஒளியை வீசும்
நற்றமி ழேயென் தாயே!
உன்றன் பெருமை கூற
உயர்வில் சிறியேன் யானே!
சிந்தை மகிழ்ந்தே உந்தன்
சீர்மிகு தாளைப் பணிந்தேன்
பைந்தமிழ்த் தாயே நீஇப்
பாருள் ளவரை வாழ்வாய்!
*************************************************************************************
ஆசைக் கரும்பே அல்லிப் பூவே
அழகுத் தமிழே அன்பின் வடிவே
வீசும் காற்றே விளையும் பயிரே
வித்தக மணியே இரத்தினச் சுடரே
பாசம் பொங்கும் ‘ஹாரூன்’ மகனே
பச்சைக் கிளியே பனிமலர்த் தேனே
நேச அன்னை ரமலான் அஜினா
நித்தம் முத்தும் ‘சமருதீன்’ கனியே
பாண்டியன் நாட்டில் பிறப்பை விடுத்தே
மலையக மண்ணில் பாதம் பதித்தாய்
காண்போர் வியக்கக் கண்ணைப் பறித்தே
கைகள் கொட்டிக் கவினிதழ் விரித்தாய்
ஆண்டும் ஒன்றாய் அகவை செல்ல
அகமே நிறைந்தோம் ஆருயிர்க் கோவே
தேன்மழை பெருகும் திருவாய் சிந்தித்
திகழும் உருவே! சித்திரக் கலையே!
உயர்ந்து வளர்ந்து ஒண்கலை பயின்று
ஓதும் ‘குருஆன்’ உண்மை உணர்ந்து
நியமம் அறிந்து நேர்மை புரிந்து
நித்தம் ‘கலிமா’ சத்தில் மிதந்து
பயன்தரும் ‘மார்க்கம்’ இசுலாம் காத்து
பாரத மெங்கும் தீன்னெறி விதைத்து
இயக்கும் அன்னை தந்தைசொல் கேட்டு
இறையருள் பெற்று யாண்டும் வாழ்கவே!