பதினெட்டென்றால் படிக்கும் வயதே!
பதினெட் டென்றால் படிக்கும் வயதே,
பக்குவ மில்லா வயதினர் என்பர் !-இந்தப்,
பதின்ம வயதில் பாழும் அரசியல்,
படிப்பைத் தடுக்கும் அரசியல் விழுது!
இருபத் தொன்றே இதற்கும் பொருந்தும்,
இயல்பாய் மூளையில் அரசியல் பதியும்!-மேலும்,
ஒருபத் தானால் உண்மை புரியும்,
உருப்பட அரசியல் உதவியும் புரியும்!
படிப்பே வேண்டாம். அரசியல் போதும்,
பட்டம் எதற்கு விருதுகள் உண்டே!- இதற்குத்,
துடிப்பார் என்றால் துடுப்பை இழந்த,
துறைகள் தானே அதிகம் பெருகும்!
ஆசிரி யர்கள் அரசியல் நுழைய,
அதற்குத் தடைகள் இன்னும் இல்லை- இதற்கு,
ஆசிகள் வழங்குதல் அக்கப் போரே,
அப்படி நடந்தால் அநியா யந்தான்!
இருபத் தொன்றே எதற்கும் பொருந்தும்,
இந்த வயதே சிந்தனை வயது !- புத்திக்,
குறுகிடக் காட்டும் பதினெட் டெல்லாம்,
குற்றப் பட்டியல் உயர்ந்திடக் காட்டும்!
படிப்பில் நாட்டம் குறைந்திட நேரும்,
பக்குவ மில்லா அரசியல் நாறும்!-வெறும்,
துடிப்பில் சேரும் அரசியல் எல்லாம்,
துன்பச் சரக்கின் தூண்களாய் மாறும்!
*****************************************************************************************
எவன்தான் தலைவன் எவன்தான் தொண்டன்,
எதும் புரியாது- தலைவன்,
இவன்தான் என்றால் எடுத்துக் சொல்ல,
எவனும் கிடையாது!
மக்களுக் காக மதிக்கும் செயலில்,
மகிழ்ச்சியும் இருக்காது! - எம்,
மக்களின் துன்பம் இடுக்கண் களையும்,
மாண்பெதும் தெரியாது!
இங்கே பிறந்தோம் இங்கே வளர்ந்தோம்,
இதுதான் எமதில்லம்! –தமிழன்,
எங்கோ பிறந்தான் இவள்யார் என்பான்,
எதிர்ப்பே திமிருள்ளம்!
காடுகள் மேட்டை அழித்து வளமாய்,
காத்தவன் பெருமையினை- மலைய,
நாடிது போற்ற மறந்திடல் என்பது,
நன்றிக் கதுமிரட்டல்!
அழகிய வீட்டைக் அமைத்துக் கொடுத்தோம்,
அந்நியம் ஆனதுவாம்!- இங்கே,
பழகிடும் அந்நியம் பாய்ந்தே குதற,
பசுத்தோல் காண்பதுவா!
உழைத்தவன் இங்கே ஓடாய்த் தேய்ந்தான்,
ஒன்றுமே நிலையில்லை!- தொண்டன்,
பிழைக்க வந்தவன் என்கின் றானே,
பிழையென் றறியாமல் !
தலைவன் மட்டும் சொகுசாய் வாழும்,
தர்மமும் நிலைக்கிறது- சினத்தால்,
அலையும் கூட்டம் நிறவெறி ஆட்டம்,
அசலாய்த் தெரிகிறது!