எங்கே நீ இறைவா
கொட்டுகின்ற மழையெனினும்
கொதிக்கின்ற வெயிலெனினும்
விட்டதில்லை வழிபாட்டை ;
வெறுத்ததில்லை வேண்டுதலை
இட்டமுடன் இறைவனுனை
இதயமதில் நிறைத்தோமே
நட்டநடுக் கடலிலெமை
நலிவுறவே செய்தனையே!
குன்றுதனில் குடிகொண்ட
குமரவடி வேலவனே
கொன்றொழிக்கும் கோறனியின்
கொடுமையினைத் தீராயோ
இன்றுவரை இரங்காமல்
எங்கேசென் றிருந்தனையோ
தொன்றுதொட்டு வணங்கிடுவோர்
தொலைந்தபின்தான் தோன்றுவையோ?
எத்தனையோ கடவுள்கள்
எம்மக்கள் மத்தியிலே
அத்தனையும் கதைதானோ
அழித்தலவர்ப் பணியாமோ
இத்தனைபே ரழிந்திருந்தும்
இன்னுமுனை நம்புகின்றோம்
பித்தரைப்போல் புலம்பிநிதம்
பிதற்றியுளம் வெம்புகின்றோம்!
கண்முன்னே வரவில்லை
காட்சியும்தான் தரவில்லை ;
மண்மீதே மாயுமுயிர்
மடக்கும்படிச் செயவில்லை;
எண்ணற்ற நச்சுயிரி
எமையழித்தும் வாராமல்
விண்மீதே உறைவீரோ
விடமுண்ட கண்டாநீ!
அனுதினமும் கோறனியால்
அழிகின்றார் மாந்தரிங்கு;
வினையகற்ற வேலெடுத்து
விரைந்தேவா நீயிங்கு!
நனைந்தவிழி நீர்துடைக்க
நச்சுயிரி தனைக்கொன்று
மனுக்குலத்தைக் காத்தருள்வாய்
மண்ணுலகை உய்வித்து!
****************************************************************************************
பெண்மை வாழ்க
பெண்மையெனும் பேரருளைப் பெறுவதுநற் பேறாமே!
பெண்ணினமாய்ப் பிறப்பெடுத்தல் பெருந்தவத்தின் பயனாமே!
அன்னையென வடிவெடுத்தே அரவணைக்குஞ் சேவையெல்லாம்
இன்னுமொரு பிறவிக்கும் இணைந்திடும்நல் வினையாமே!
கண்ணிறைந்த காதலியாய்க் கரம்பிடித்த மனையாளாய்
சின்னவளாய்ப் பெரியவளாய்ச் திருமகளாய் மருமகளாய்
என்னுடனே கலந்திருக்கும் எனதுயிராம் தோழியராய்
என்றுமெனைச் சேர்ந்திருக்கும் உயர்நல்பெண் குலம்வாழ்க!!!