தடையெல்லாம் சாம்பலாகும்
கட்டிலுக்குக் காலாகி நின்றா யன்றிக்
களைத்துடலை அதிலென்றும் சாய்த்த துண்டா?
பெட்டியிலே பணம்நிறைந்த துன்னால்! ஆனால்
பேயாட்டம் போட்டதெலாம் அவர்கள் தாமே!
வெட்டுபட்ட காலுக்கு மருந்தும் தாரார்!
வெங்கொடுமை சாக்காடே உனக்குச் சொந்தம்!
நட்புரிமை பூண்டவனே உழைப்பின் வித்தே!
நானிலத்தில் உன்விலங்கும் உடைந்த தன்றோ!
நேரத்தைக் கணித்தாரா உடலம் சோர்ந்தால்
“நில் கொஞ்சம் நிழலில்” என விடுவித்தாரா?
ஓரந்தான் உனக்கென்றார் ஏழ்மை நீங்க
உனக்(கு) எள்ளின் மூக்களவும் இலையே வாய்ப்பு!
யாரிந்த மண்ணுரிமை அவர்க்குத் தந்தார்?
ஆர்த்தெழுந்த மறவர்வாய் கேட்ட பின்னே,
கூரமுந்திப் போராட்டப் புரட்சி ஓங்கக்
கூடிவந்த வெற்றிதான் மேநாள் ஆகும்!
ஒளிவீசும் விளக்கோரம் இருளி ருக்கும்!
உரிமைக்குப் பக்கத்தும் விலங்கு தூங்கும்
புலிவெல்லும் திறம்கூட சிலநே ரத்தில்
பூனைக்கு நடுங்கிடுதல் உண்டே! மண்ணில்
தொழிலாளர் உரிமைநலம் மேநாள் தந்தும்
தொல்லையெலாம் ஒழிந்தனவா? இல்லை! இல்லை!
வளர்ந்தோங்கும் உலகத்தில் விழித்துக் கொண்டால்
வாழ்வெதிர்க்கும் தடையெல்லாம் சாம்பல் ஆகும்!
உழைக்கமட்டும் தெரிந்திருத்தல் ஒருநிலைதான்!
உருவாக்கத் திறன்பெறுதல் மற்றோர் ஆற்றல்!
பிழைத்துயர வழிகாண முடியா விட்டால்
பெருஞ்செல்வர் ஊதிவிடும் புகையே ஆவாய்!
களைத்தொதுங்கிப் போகாமல் கால மெல்லாம்
கருத்தோடு போராடி விழித்தி ருந்தால்
விளைந்திடும்நற் காலமுன் ‘வர்க்கம்’ ஓங்க
விதையூன்றும் வியனுலகே
சோலை யாகும்!