மக்கள் விரும்பும் விண்ணமுது!
கார்மேகஞ் சூழ்வானில் காரிகையாய் மீண்டுமிங்கே
ஊர்மக்கள் பஞ்சத்தை ஓட்டிடவே மாமழையாய்
சீர்மிகு நல்லமுதாய்த் தீயோர்க்கும் நல்குகின்ற
கார்மழையே நீவாழி பெய்து!
வீழும் பயிர்க்கு விருந்தாய் அமைந்திங்கு
மாழும் உடற்கு மருந்தாய் அமைந்துபின்
சூழுகின்ற வெப்பினது சூட்டினைப் போக்கியே
வாழுமிந்த வான்மழை நன்கு!
விண்ணமுதாய் மக்கள் விரும்பும் இறைப்படைப்பாய்க்
கண்ணெதிரே தோன்றிக் கருத்தாகப் பெய்துவரும்
விண்ணழகைப் பாடுமொரு விந்தையினைக் கொண்டதனால்
பண்ணமுதம் தந்தேன்
உனக்கு!
*******************************************************************************************
தீந்தமிழ்ச் சொல்லெடுத்துத் தேனாகப் பாட்டிசைக்கும்
வேந்தே; தமிழ்த்தாய் விரும்பிய மைந்தேநீ
மாந்தன் புகழ்நோக்கி வந்தாய்; கவிதந்தாய்!
காந்தமாய் ஈர்த்தொளிர்ந் தாய்!
பாவையர் போற்றிடும் பாரதக் காதலனாய்;
தூவலைக் கொண்டு துயர்தனைப் போக்கிடும்
சேவையைச் செய்துவந்த தேன்தமிழ்ச் சேயானாய்
யாவும் அறிந்துமறைந் தாய்!
பாரதி என்றிடும் பாரதத்தீப் பாவலனை
வீரத்தின் ஊற்றாய் வியந்தென்றும் போற்றியே;
தீரமிகு அக்கவியைத் தேடிப் படித்ததன்
சாரைப் பருகிவாழ் வோம்!