கவிஞன்
ஆழ்கடலில் முத்தெடுத்தல் போன்றே எண்ண
ஆழ்கடலில் கருத்தென்னும் முத்தெ டுத்துக்
தாழ்வின்றி யழகோடு முத்துக் கோக்கும்
தன்மையாளர் போல்கருத்து முத்தை முன்னோர்
ஆழ்ந்தறிந்(து) அமைத்திட்ட மரபு மாறா
அமைப்பினிலே பாவாகக் கோத்து மாந்தர்
வாழ்க்கைக்(கு) ஏற்றபடி ஞாலத் தார்க்கு
வழங்கிவரும் தொண்டனவன் கவிஞன் என்பான்!
பொன்தன்னைப் பலவிதமாய் அமைத்த மைத்து
புதுப்புதுநல் உருவினிலே நகைகள் செய்து
பெண்ணுலகு போற்றிடவே நல்கும் மாந்தர்
பொற்கொல்லர் போன்றேதன் கருத்துப் பொன்னை
வண்ணமுடன் புதுப்புதுநல் தன்மை சேர்த்து
வான்புகழ்கொள் இலக்கியமாய் உருவொன் றாக்கி
மண்ணில்வாழ் மாந்தர்க்கு இன்பங் கூட்ட
மாளாமல் உழைக்குமவன் கவிஞன் என்பான்
சீரான கரும்பரைத்துச் சாறு சேர்க்கும்
திறத்தார்போல் சிந்தையெனுங் கரும்ப ரைத்துப்
பேருடைய கருத்துப்பா கொடுத்தே அச்சுப்
பிழையறவே நன்காக்கி நல்கு மன்னான்
ஊருக்கு மத்தியிலே உடைய கேணி
ஊற்றுப்போல் எஞ்ஞான்றும் பயனை நல்க
பாருக்காய் நற்பாக்கள் படைத்த ளித்துப்
பண்பமைதி கொள்ளுமவன் கவிஞன் என்பான்
குடியோம்பும் நல்லரசன் செங்கோல் போன்றும்
குழந்தைக்குத் தாயணைப்புக் குளிர்மை போன்றும்
செடிவளர வேண்டும்நல் உரத்தைப் போன்றும்
சேயிழைக்குத் தன்னாளன் துணையைப் போன்றும்
கொடியோங்க உதவும்நல் மரத்தைப் போன்றும்
குவலயத்தில் கிழவர்க்குக் கோலைப் போன்றும்
இடர்சூழந்த இவ்வுலக மாந்த ருக்கே