எத்தனை கூட்டம்
வளைந்தும் நெளிந்தும்
குழைந்தும் பிறரால்
வாழ்வது சிறுமையடா – தினம்
அலைந்தும் திரிந்தும்
உழைத்தே வாழ்ந்தால்
அதுவே பெருமையடா
இறக்கும் வரைக்கும்
அறிவில் லாமல்
இருப்பதும் அவலமடா – உன்
செருக்கும் சிறப்பும்
அழிந்திடும் போது
சிரிக்கும் உலகமடா
இரவல் உயிரைத்
தனக்குள் தாங்கி
இத்தனை ஆட்டமடா – நீ
இரவில் படுத்தே
எழாமல் விடிந்தால்
எத்தனை கூட்டமடா!
*******************************************************************************************
நாலு காசு கையில் வந்தால்
நட்பை மறக்கிறான் – தம்பி
நாலுபேரு உடனிருந்தால்
நாலும் மறக்கிறான்.
ஆளுபேரு பதவியென்றே
ஆளாய்ப் பறக்குறான் – தம்பி
நாளை நமது கையிலுண்டா?
நடப்பை மறக்குறான்.
பாசம்நேசம் பற்றையெல்லாம்
தூசு காண்கிறான் – தம்பி
மோசம்போகும் பாதையைத்தான்
மோட்சம் என்கிறான்.
வேசம்போடும் மனிதரைத்தான்
வெளிச்சம் என்கிறான் - தம்பி
கோசம்போடும் கூட்டத்தைதான்
கூவியழைக்கிறான்.
ஆறடியில் அடங்கிவிட்டால்
அனைத்தும் பொய்யடா – தம்பி
பேரிடிக்கு முன்னேநல்ல
பெயரை நெய்யடா
சீரடியாம் குறளடியைச்
செவியில் கொள்ளடா – தம்பி
சீரழிவைக் கொண்டுவரும்
செயலைத் தள்ளடா!