ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிஞர் மகிழன் கணேசன்


 

உயிர்மொழியான தமிழ்மொழியாம்!
 
உலகத்தில் மூத்தமொழி!
      உயிர்தனிலே கலந்தமொழி!
உலவுகின்ற யாவிலுமே
      ஒன்றாக இயைந்தமொழி!
கலைகளின் பிறப்பிடமாய்க்
      காப்பியனைத் தந்தமொழி!
கலகமென்ப தில்லாத
      கண்ணியத்தில் நிலைத்தமொழி!
 
தமிழகத்தில் பிறந்தமொழி!
      தனிச்சிறப்புக் கொண்டமொழி!
அமுதென்று பாவேந்தர்
      அழகாகச் சொன்னமொழி!
இமிழ்கடலைத் தாண்டியுமே
      இமயம்போல் உயர்ந்தமொழி!
இமையளவும் வளம்குன்றா
      இனிக்கின்ற என்ற(ன்)மொழி!
 
ஐந்துபெருங் காப்பியமாய்
      அணியொளிரும் இலக்கியமாய்
ஐந்தெழுத்து வாசகமாய்
      ஆளுகின்ற பழைமைமொழி!
ஏந்திநின்ற இலக்கணத்தால்
      எந்நிலையும் செழித்தமொழி!
வேந்த(ர்)குலம் காத்தமொழி!
      வீறுகொண்ட தாயி(ன்)மொழி!
 
வள்ளுவனின் பாக்களிலே
      வாழ்கின்ற வாழ்வி(ன்)மொழி!
தெள்ளமுதம் அளிக்கின்ற
      தேன்சொட்டும் இனியமொழி!
உள்ளமதைக் கொள்ளைகொள்ளும் 
      உணர்வுமிக்க அமுதுமொழி!
துள்ளவைத்துக் கிழவனையும்
      துல்லவைக்கும் கனிந்தமொழி!
 
காத்துவரும் மரபினிலும்
      காணுகின்ற காட்சியிலும்
யாத்துவைத்த பாவினிலும்
      இலக்கியத்தின் வகைகளிலும்
மூத்தமொழி இம்மொழியாம்!
      முடிவில்லா நிறைமொழியாம்!
ஏத்துதலுக் குரித்தாகும்
      எம்மொழியே தமிழ்மொழியாம்!
************************************************************************************

தேன்மொழியாள்
 
வண்ணப் பூவொடு வரிவண்டின் காதல்போல்
விண்ணின் மதியின் முகத்தாளை நோக்கின்
பண்ணும் இழைந்து பாவன்பு கொள்ளுதே!
 
சொட்டுங் காதற்குச் சூடும்பூ வாரமாய்த்
திட்டுந் தேன்மொழியாள் பேச்சுங் கேட்கின்
கொட்டுங் கொடுந்தமிழும் நெஞ்சத்தை அள்ளுதே!
 
மதுவூறும் மலர்போல் மயிலின் நடம்போல்
பதமாய் இவள்நடை பாரினில் பார்க்கின்
இதமாய்(எ)ன் னுள்ளம் இசையாய்த் துள்ளுதே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...