ஞாயிறு, 4 ஜூன், 2023

கவிஞர் சரவணன் இராமசந்திரன்


 

நல்மழையே நில்!
 
வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ?
உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே!
கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணுற்றுக் கலங்கிட்டோம்!
படும்பாட்டை வெல்வதற்கோ பலவழிகள் வேண்டிநின்றோம்!
கண்ணுறக்கம் போக்கிவிட்டாய்க் காண்திசையில் நீர்பரப்பி!
விண்ணவளே நீபுரியும் வேடிக்கை விட்டிடுவாய்!
இயற்கைமகள் நீநடத்தும் இவ்வேலை எதுவரைக்கும்?
செயற்கைமிகு சிந்தனையின் செயல்பாட்டின் விளைவிதுவோ?
எப்பிழைதான் மனிதர்கள் இயற்கைக்குச் செய்தாலும்
அப்பிழையைப் பொறுப்பதன்றோ அன்னையவள் அடையாளம்!
செல்வழியும் தெரியாமல் சேய்கள்தாம் தவிக்கின்றோம்!
நல்வழியும் நீகாட்டி நன்மைமிகச் செய்திடுவாய்!
இனியுமென்ன சோதனைகள் எங்களுக்குத் தரவுள்ளாய்?
இனிமைமிகு நல்வாழ்வை ஏன்பறித்துக் கொள்கின்றாய்?
மரம்வளர்க்கத் தவறிட்டோம் மலைமகளே மன்னிப்பாய்!
தரமுயர்த்த இயற்கையினைத் தாழ்த்திடவே இனிமாட்டோம்!
குலங்காத்த குலமகளே குடியமர வகைச்செய்வாய்!
நலங்காக்கும் நல்மழையே நகர்!

**********************************************************************************************
எது கவிதை ?
 
புதுக்கவிதை எழுதிவரும் புதுமையுளம் படைத்தோரே;
எதுகவிதை என்றறிய இலக்கணமுங் கற்றீரோ?
முதுக்கவிதை படைத்திட்ட முன்னோர்தாள் பற்றீரோ?
மதுக்கவிதை எழுதிவரும் மரபுவழி மறந்தீரோ?
 
புதுமைகளை ஏற்பதிலே பொதுவுணர்வு மிங்கிருக்கு!
புதுக்கவிதை பழைமையிலே பூத்துவந்த புதுவழக்கு!
பதுமையல்ல பழைமையதும் பதுங்கிடவே அறிந்திடுக!
புதுநெறிதான் உயர்ந்ததென்ற போக்கதனை மாற்றிடுக!
 
விதிவகுத்த நம்முன்னோர் வீணரல்லர் விளங்கிடுக!
சதிவலையைப் பின்னிவைக்கும் சதிராட்டம் நிறுத்திடுக!
புதுக்கவிதை எனும்வழக்கைப்  புறந்தள்ளி வைத்திடுக!
மதிப்பளித்துப் பழைமைவழி மகிழ்ந்துடனே நடந்திடுக!
 
மரபதனைக் காப்பதொன்றே மதிப்பளிக்கும் நல்முறையாம்!
கரமதனைக் கோத்துநின்றால் கறையாவும் நீங்கிடுமாம்!
உரமதனை இட்டுவைத்தால் உளமதுவும் தெளிவுறுமாம்!
தரம்நிறைந்த முதுக்கவிதை தரணியிலே நிலைத்திடுமாம்!
 
உரைவீச்சைக் கவிதையென உரைப்பதையே தவிர்த்திடுக!
கரையோரம் நின்றுகொண்டு கடலாழம் எண்ணாதீர்!
கரைதாண்டி கடல்வந்தால் கவிமுத்தும் எடுத்திடலாம்!
உரைவீச்சைக் கடந்துவந்தால் உயர்கவிதை படைத்திடலாம்!


 

முனைவர் குமரன் வேலு இராமசாமி


 

மாண்புமிகு மனைவி
 
காலைக்குள்  பூசைசெய்து கையை வைத்து
     கண்ணாளன் எனையெழுப்பி கண்ண டித்து
வேலைக்கு மணியாச்சு விரைக என்பாள்
      விழுந்தடித்து தொடங்கிடுவாள் வீட்டு வேலை
சாலைக்கே வந்திடுவாள் 'தாட்டா' காட்ட
      சாயங்கள் பூசாத அன்பால் மின்னும்
சோலைப்பூ  என்மனைவி சொக்கத் தங்கம்
     சொல்லாலே எனைவெல்லும் சொந்தக் காரி!
 
அஞ்சிநிற்கும் ஆண்மகனால் ஆவ துண்டோ
            அச்சமின்றி முயன்றிடுக அன்பே என்பாள்
கொஞ்சிநிற்கும் வேளையிலும் குலைந்தி டாமல்
     குடும்பத்தின் நலனொன்றைக் கோரி நிற்பாள்
வஞ்சிநிற்கும் வடிவழகில் வடிவு ரைத்த
      வள்ளுவனின் இலக்கணங்கள் வழுவா நிற்கும்
எஞ்சிநிற்கும் நாள்களிலே இவளுக் காக
      எனதன்பை கொட்டுதலே இன்ப மாகும்!
 
தன்னலங்கள் இல்லாத தாயைப் போன்று
          தற்பெருமை கொள்ளாத தகைமை ஒன்றால்
அன்னலட்சு மியாம்தெய்வம் அவளின் கையால்
          அன்பொழுக உணவருந்த ஆவல் கூடும்
இன்னலில்லை இதுவரைக்கும் இன்னும் உண்ண
          எண்ணுகிற தென்நெஞ்சம் இவளுக் காக
 என்னலங்கள் விட்டுவிட ஏங்கு கின்றேன்
       எனதருமை மனையாளின் இன்பத் திற்கே!
   
நிலவைப்போல் அவள்பார்க்கும் பார்வை யாலே 
       நெஞ்சுருக்கும் துயரங்கள் நீற்றுப் போகும் 
கலவைப்போல் மனதுள்ளே கலக்கம் வந்தால்
     கணக்காக வழிசொல்வாள் கவலை நீங்கும்
குலவைத்தான் இடுகின்றார் கோயில் கட்டி
      குலதெய்வம் கும்பிடத்தான் வீட்டில் வாழும்
சிலைவைத்தால் மனதுக்குள் சிலையை வைத்தே
    சித்திரமாம் மனைவிக்குச் சிறப்பு செய்வேன் !

**********************************************************************************************

தாய்மொழிக் காத்திடு
 
நிறைமொழித் தமிழ்தன் னேரில்லாத
மறைமொழி இதிலே மந்திரம் உண்டென
வாய்மொழி யாலும் மனமொழி யாலும்
தாய்மொழிக் காத்தல் தமிழரின் கடனாம்
செந்தமிழ் அறிந்தார் செம்மைப் பெற்ற
அந்தணர் ஆகி அருந்தமிழ் யாத்ததால்
கற்றுணை பூட்டிக் கடலிற் பாய்ச்சியும்
சொற்றுணை தந்தது தூயத் தமிழாம்
தூயவள் தமிழைத் தொழுதல் நன்றாம்
தாயவள் மகிழ்வாள் தமிழரும் தழைப்பார்
பற்றுகள் கொண்டு பயின்றிடத் தமிழால்
வெற்றிகள் தேடி விரைவில் வந்திடும்
விண்ணவர் அறியும் வியன்மிகு தமிழை
மண்ணிதில் தமிழர் மறுதலிப் பாரெனில்
வையமும் இகழும் வானோர் நகைப்பர்
ஐயமே இல்லை! அவனியில் நம்நிலை
ஒற்றுமை யற்றே வீணாய்ப் போகுமுன்
பற்றுவோம் தமிழைப் பார்வை விரியுமே!   
ஓங்கலி டையுதித்(து) ஒளிரும் கதிர்போல்
ஓங்குக தமிழ்ப்புகழ் உலகில் எங்குமே!


 

கவிஞர் சு. குணசேகரன், மலாக்கா


 

புத்தாண்டு வேள்வி
 
பா: நாலடிக் கொச்சகம்
புதிய ஆண்டே இனிதே வருக
     புதுத் தெம்பை யள்ளித் தருக
புதிய திட்டம் வெற்றிப் பெறுவே
     புதுத் திடமும் விரைந்து தருக!
 
சவால் கொண்ட ஆண்டு கடந்து
    சாதனை பெறும் ஆண்டு மலர்க
சீறும் நோய் சிதறிப் போக
   சீரும் சிறப்பும் செழித்து வருக!
 
மனித குலமும் உறுதி யுறுக
  மண்ணுலகும் மாண்பு பெறுக
புனித செயல் யாவும் பெருக
  புண்ணி யங்கள் நிலைத் துயர்க!
 
கல்வி சமூகம் பொருளும் உயர்க
   கன்னல் தமிழும் நிலைத்து நிற்க
களிப்பு நிறையும் ஆண்டு மலர
   கன்னி முயற்சி யாவும் செய்க!!!
 
******************************************************************************************

அன்பு வாழ்ந்திடுமே !
 
அன்பென்று சொல்வதால்
வன்புதான் பிறந்திடுமோ!
அன்புக்கும் உண்டோதான்
அடைக்குந்தாழ் அறிவோமே!
அன்றேநல் மொழிந்தாரே!
அறப்பாலில் வள்ளுவரும்!
நன்குசெய் நலிவிலாது
நல்லன்பும் வாழ்த்திடுமே!

கவிஞர் உசாராணி சாமிநாதன்


 

மூச்சிலும் பேச்சிலும் முதுமொழி தமிழே
 
வையம் பேசும் மொழிகளிலே
    வளமை நிறைந்த வண்டமிழே
பைய நாவை அசைத்தாலும்
   பாங்காய் வருவாய்ப் பைந்தமிழே!
மையல் கொண்டு கற்றாலே
  மங்காப் புகழைத் தந்திடுவாய்
தையல் உன்னைப் போன்றதொரு
  தனித்த மொழியும் இல்லையம்மா
 
சங்கம் வைத்து வளர்த்தனரே
  சாரம் மிகுந்த செம்மொழியை
வங்கக் கடலின் ஆழம்போல்
  வளமை பலவும் நிறைந்துள்ள
தங்கத் தமிழைக் கற்றதனால்
  தனித்த புகழைப் பெற்றவர்கள்
எங்கும் மக்கள் பலருண்டாம்
   என்றே நீயும் அறிவாயா?
 
மண்ணில் பிறந்த மானிடனே
   மங்காப் புகழைப் பெற்றிடவே
விண்ணில் சென்று நீயுந்தான்
  வெற்றிக் கொடியை நாட்டிடவே
கண்ணின் மணியாய் நம்தமிழைக்
  கருதி நீயும் கற்றிடணும்
எண்ணம் யாவும் எப்போதும்
    என்றன் உயிரே என்றிடணும்

********************************************************************************

தாயே நீதெய்வம்

குடிபுகுந்தாய் என்னில்லம் குன்றாது நிற்க
விடிவெனக்கு நீதந்தாய் விந்தைதான் நாளும்
முடிந்தவரைக் காத்திடவும் முற்றிலுமாய்த் தந்துப்
படியெனவும் வந்திட்டாய்ப் பார்!
 
பார்மிசை வாழ்த்துகின்றேன் பார்த்தெனைப் புன்னகையால்
வார்த்தைகள் சொல்லுகின்றாய் வர்ணிக்க வார்த்தையில்லை
சேர்த்தெனை முத்தமிட்டாய் சேர்த்துவைத்த சொத்தாக
சீர்பெற வேண்டும்நீர் சீர்!
 
சீர்பெற்று நானும் சிறந்திட என்னருகில்
பார்போற்ற என்னையும் பார்த்தவர்கள் கண்படவும்
ஊர்விட்டு வந்தெனை ஊரறியச் செய்திட்டாய்
யார்செய்தல் கூடிடுமோ பார்!
 
யார்வந்து நின்றிடினும் யார்வந்து சொல்லிடினும்
கார்மேகம் போன்றென்னைக் காலத்தில் மாற்றிட்டாய்
மார்தட்டிச் சொல்லிடுவேன் மாதாவே நீதெய்வம்
சீர்பெற்று நின்றிடும் சீர்!
 
சீலத்தில் நல்லது சீர்த்தமிகு தாயன்பு
ஞாலத்தில் நன்னெறிகள் ஞானத்தா லோங்கிடவும்
காலத்தில் செய்திடுவாய் காரியங்கள் ; நன்மைகளால்
பாலத்தை நல்கும் பறந்து!
 
மாண்புள்ள சான்றோர்கள் மண்ணுலகில் தாயன்பைக்
காண்கின்ற பாதையைக் கண்ணெதிரே காட்டிவிட்டார்
வேண்டுகின்ற சொத்துகள் வேகமாய்ப் பற்றிடவே
ஆண்டவனும் நல்கிய அன்பு!

கவிஞர் மகிழன் கணேசன்


 

உயிர்மொழியான தமிழ்மொழியாம்!
 
உலகத்தில் மூத்தமொழி!
      உயிர்தனிலே கலந்தமொழி!
உலவுகின்ற யாவிலுமே
      ஒன்றாக இயைந்தமொழி!
கலைகளின் பிறப்பிடமாய்க்
      காப்பியனைத் தந்தமொழி!
கலகமென்ப தில்லாத
      கண்ணியத்தில் நிலைத்தமொழி!
 
தமிழகத்தில் பிறந்தமொழி!
      தனிச்சிறப்புக் கொண்டமொழி!
அமுதென்று பாவேந்தர்
      அழகாகச் சொன்னமொழி!
இமிழ்கடலைத் தாண்டியுமே
      இமயம்போல் உயர்ந்தமொழி!
இமையளவும் வளம்குன்றா
      இனிக்கின்ற என்ற(ன்)மொழி!
 
ஐந்துபெருங் காப்பியமாய்
      அணியொளிரும் இலக்கியமாய்
ஐந்தெழுத்து வாசகமாய்
      ஆளுகின்ற பழைமைமொழி!
ஏந்திநின்ற இலக்கணத்தால்
      எந்நிலையும் செழித்தமொழி!
வேந்த(ர்)குலம் காத்தமொழி!
      வீறுகொண்ட தாயி(ன்)மொழி!
 
வள்ளுவனின் பாக்களிலே
      வாழ்கின்ற வாழ்வி(ன்)மொழி!
தெள்ளமுதம் அளிக்கின்ற
      தேன்சொட்டும் இனியமொழி!
உள்ளமதைக் கொள்ளைகொள்ளும் 
      உணர்வுமிக்க அமுதுமொழி!
துள்ளவைத்துக் கிழவனையும்
      துல்லவைக்கும் கனிந்தமொழி!
 
காத்துவரும் மரபினிலும்
      காணுகின்ற காட்சியிலும்
யாத்துவைத்த பாவினிலும்
      இலக்கியத்தின் வகைகளிலும்
மூத்தமொழி இம்மொழியாம்!
      முடிவில்லா நிறைமொழியாம்!
ஏத்துதலுக் குரித்தாகும்
      எம்மொழியே தமிழ்மொழியாம்!
************************************************************************************

தேன்மொழியாள்
 
வண்ணப் பூவொடு வரிவண்டின் காதல்போல்
விண்ணின் மதியின் முகத்தாளை நோக்கின்
பண்ணும் இழைந்து பாவன்பு கொள்ளுதே!
 
சொட்டுங் காதற்குச் சூடும்பூ வாரமாய்த்
திட்டுந் தேன்மொழியாள் பேச்சுங் கேட்கின்
கொட்டுங் கொடுந்தமிழும் நெஞ்சத்தை அள்ளுதே!
 
மதுவூறும் மலர்போல் மயிலின் நடம்போல்
பதமாய் இவள்நடை பாரினில் பார்க்கின்
இதமாய்(எ)ன் னுள்ளம் இசையாய்த் துள்ளுதே!


கவிஞர் க. மணியம்


 

கவிஞன்

ஆழ்கடலில் முத்தெடுத்தல் போன்றே எண்ண
      ஆழ்கடலில் கருத்தென்னும் முத்தெ டுத்துக்
தாழ்வின்றி யழகோடு முத்துக் கோக்கும்
      தன்மையாளர் போல்கருத்து முத்தை முன்னோர்
ஆழ்ந்தறிந்(து) அமைத்திட்ட மரபு மாறா
      அமைப்பினிலே பாவாகக் கோத்து மாந்தர்
வாழ்க்கைக்(கு) ஏற்றபடி ஞாலத் தார்க்கு
      வழங்கிவரும் தொண்டனவன் கவிஞன் என்பான்!
 
பொன்தன்னைப் பலவிதமாய் அமைத்த மைத்து
      புதுப்புதுநல் உருவினிலே நகைகள் செய்து
பெண்ணுலகு போற்றிடவே நல்கும் மாந்தர்
      பொற்கொல்லர் போன்றேதன் கருத்துப் பொன்னை
வண்ணமுடன் புதுப்புதுநல் தன்மை சேர்த்து
    வான்புகழ்கொள் இலக்கியமாய் உருவொன் றாக்கி
மண்ணில்வாழ் மாந்தர்க்கு இன்பங் கூட்ட
      மாளாமல் உழைக்குமவன் கவிஞன் என்பான்
 
சீரான கரும்பரைத்துச் சாறு சேர்க்கும்
    திறத்தார்போல் சிந்தையெனுங் கரும்ப ரைத்துப்
பேருடைய கருத்துப்பா கொடுத்தே அச்சுப்
      பிழையறவே நன்காக்கி நல்கு மன்னான்
ஊருக்கு மத்தியிலே உடைய கேணி
      ஊற்றுப்போல் எஞ்ஞான்றும் பயனை நல்க
பாருக்காய் நற்பாக்கள் படைத்த ளித்துப்
      பண்பமைதி கொள்ளுமவன் கவிஞன் என்பான்
 
குடியோம்பும் நல்லரசன் செங்கோல் போன்றும்
      குழந்தைக்குத் தாயணைப்புக் குளிர்மை போன்றும்
செடிவளர வேண்டும்நல் உரத்தைப் போன்றும்
      சேயிழைக்குத் தன்னாளன் துணையைப் போன்றும்
கொடியோங்க உதவும்நல் மரத்தைப் போன்றும்
      குவலயத்தில் கிழவர்க்குக் கோலைப் போன்றும்
இடர்சூழந்த இவ்வுலக மாந்த ருக்கே
      இலக்கியத்தைத் தருந்தொண்டன் கவிஞன் என்பான்

கவிஞர் சி.விஜயலட்சுமி கோவிந்



 

இரண்டாம் தடுப்பூசி
 
தரணி தனையே முடமாக்கித்
    தாண்ட வமாடும் கோறனியை
விரைவாய் ஒழித்துக் கட்டிடவே
    விரைந்து கண்டார் தடுப்பூசி!
வரமாய்க் கிடைத்த அம்மருந்தை
    வயதில் மூத்த பெரியோர்க்கே
அரணாய் அமைக்க அரசாங்கம்
    ஆய்ந்து தெளிந்து போட்டதுவே!
 
புதிய சட்டம் ஒன்றனைத்தான்
    பொதுவில் கொண்டு வந்தரசு
மதித்தே ஊசி இரண்டுமுறை
    மறவா மல்நீ போட்டால்தான்
விதியை மாற்ற வழிபிறக்கும்
    விரைந்து உலகம் நலம்நாடும்!
அதனால் இளையோர் அனைவருமே
    அதனைப் பெறவே விரைந்திடுவீர்!
 
வயதில் மூத்த பெரியோர்தம்
    மக்கள் நிழலில் வாழுவதால்
சுயமாய் எங்கும் செல்வதற்கும்
    துணிவே யின்றிக் கலங்குகின்றார்!
துயரில் வாழும் முதியோரின்
    துன்பந் தனைத்தான் அரசறிந்தே
புயலாய்த் தடுப்பு மருந்தினையே
    போட்டு முடித்தல் சிறப்பன்றோ!

*********************************************************************************

குறை தீர்ப்பாய் குமரா
 
கந்தா கடம்பா கதிர்வேலா
    காப்பாய் உலகைத் திருக்குமரா!
வெந்தே மண்ணில் வாடுகின்றோம்
    விடிவைத் தரவே விரைந்தேவா!
சொந்தந் தனையே தூரவைத்தோம்
    தொட்டுப் பேச அஞ்சிநின்றோம்!
பந்தி யனைத்தும் ஒதுக்கிவைத்தும்
    பரவும் தொற்றோ குறையவில்லை!
 
வீடு தோறும் வேதனைகள்
    விஞ்சி நின்றே ஆடிடுதே!
காடும் கொள்ளா பிணக்குவியல்
    கண்டே மனமும் கலங்கிடுதே!
நாடும் வீடும் நலம்காண
    நாடி யுன்னை வேண்டிநின்றோம்!
கேடு யாவும் போயகல
    கிருபா கரனே அருள்புரிவாய்!

கவிஞர் சரவணன் இராமசந்திரன்

  நல்மழையே நில்!   வெள்ளத்தால் அடைந்ததுயர் விளக்கிடவும் கூடிடுமோ ? உள்ளத்தில் குடிகொண்ட உறுதியையும் போக்கிற்றே! கடும்வெள்ளம் கண்டவிடம் கண்ணு...